பாஜக தொந்தரவு கொடுக்கல.. அந்த நன்றிக்கடனுக்காகவே கூட்டணி.. எடப்பாடி புது விளக்கம்
சென்னை: அண்ணா பிறந்தாளையொட்டி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில பேர் அதிமுகவை அழிக்க நினைத்தனர் என்றும் பாஜக தான் அதிமுகவுக்கு உதவியது என்றும் பேசினார். மத்தியில் இருப்பவர்கள் நன்மை தான் செய்தார்கள் என்றும் ஒருபோதும் அச்சுறுத்தியது இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தற்போது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுக்க சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று அண்ணா பிறந்தாளையொட்டி சென்னையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

எழுச்சி சுற்றுப்பயணம்
தருமபுரி மாவட்டத்தில் நான் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி எழுச்சி சுற்றுப்பயணத்தை வைத்திருந்தோம். ஆனால் அன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இது பற்றி கேட்டபோதும் கூட அங்கு உறுதியாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு எழுச்சி பயணத்தை மேற்கொள்ளாமல், பிறகு ஒரு தேதியினை 28, 29 ஆம் தேதியில் தொடரும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன்.
அதிமுக தலைமை அலுவலகத்தை
அதற்குள் இன்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது. எப்படி என்றால், எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சந்திக்கிறார். உட்கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துகிறார்.. இல்லை.. அதிமுக கட்சியை எவராலும் எதுவும் பண்ண முடியாது. எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம். இதில் ஒரு இம்மி அளவு கூட விட்டு கொடுக்க மாட்டேன்.
என்னை யாரும் மிரட்ட முடியாது. கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். புனிதமாக இருக்கக் கூடிய, கோவிலாக இருக்ககூடிய அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை இப்போது கட்சியில் சேர்க்க வேண்டுமா? அது தொண்டனுடைய சொத்து..
மத்தியில் இருப்பவர்கள் அச்சுறுத்தல் கொடுக்கவில்லை
அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்களுடைய சொத்து.. நீங்க போய் அடித்து நொறுக்குவீர்கள்.. நான் உங்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. இன்னொருவர், அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று 18 எம்.எல்.ஏக்களை கடத்திக்கொண்டு போனீங்க.. அவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டுமா? இவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டுமா?
இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது?.. உறுதியான எண்ணம் உண்டு, உறுதியான மனநிலை உண்டு.. எதற்கும் அஞ்ச மாட்டேன்.. யாரையும் என்ன மிரட்டியும் பார்க்க முடியாது.. இப்போது சொல்கிறேன், இதுவரை கடந்த காலத்திலும் சரி, அதிமுக ஆட்சி செய்கின்றபோதும் சரி.. இப்போதும் சரி, மத்தியில் இருக்கின்றவர்கள் யாரும் நமக்கு எந்த அச்சுறுத்தலும் கொடுத்தது கிடையாது.
நன்றியோடு இருக்கின்றோம்
அதிமுகவுக்கு நன்மை தான் செய்தார்கள். அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை சில பேர் கபளிகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அப்போது கட்சியை காப்பாற்றி கொடுத்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். மத்தியில் இருக்கின்றவர்கள் தான்.. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.. பல ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நாங்கள் அப்படி நன்றியோடு இருக்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications