3 மாதத்தில் 4 மாநாடு.. கோவை, மதுரையில் பாஜக போடும் மெகா திட்டம்.. டெல்லி மேலிடம் கொடுத்த அசைன்மெண்ட்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் 4 முக்கிய மாவட்டங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்டோரை பங்கேற்க வைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதமே சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்தார். அதற்கு முன்னதாக தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டார்.

அதிமுக - பாஜக கூட்டணி இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் பெரிய உற்சாகத்தை கொடுக்கவில்லை. ஆனால் அதிமுகவின் உதவி இல்லாமல் சட்டமன்றத்திற்குள் செல்ல முடியாது என்று உணர்ந்து கொண்ட பாஜக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் போதே செயல்பட தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் அதிகளவில் பாஜக கொடிகள் தென்பட்டன.
அதேபோல் 2 வாரங்களுக்கு முன்பாக நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த பாஜக தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் பாஜக சார்பாக 4 மாவட்டங்களில் 4 பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
அந்த வகையில் கோவை, மதுரை, சென்னை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாஜகவின் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கோவையில் பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவு இருக்கும் சூழலில், மதுரையிலும் முருகன் மாநாடு மூலமாக ஒரு வளர்ச்சியை கண்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் தஞ்சாவூரில் பாஜக சில தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
இதனால் அங்கும் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இருக்கின்றனர். இந்த மாநாடு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபரில் தொடங்கி 3 மாதங்களில் 4 மாநாடுகளை பாஜக நடத்த உள்ளது. அதற்குள் கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தையை முடித்து, கூட்டணியை இறுதி செய்வதிலும் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளது. இந்தக் கூட்டணியில் பாமக, தமாகா, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்டோர் இணையலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications