அரவணைத்துன்னா.. கட்டிபிடிச்சுன்னா அர்த்தம்.. நக்கல் செய்த எஸ்வி சேகர்.. துளைத்தெடுத்த நெட்டிசன்கள்
சென்னை: கி.வீரமணியை விடாமல் விரட்டி வம்பிழுத்து வருகிறார் எஸ்வி சேகர்.. "கொரோனா தடுப்புக்கு தள்ளி நிக்க சொன்னா இந்த அறிவாளி எல்லாரையும் அரவணைத்து செல்ல சொல்றாரு" என்று கி.வீரமணியை விமர்சித்து எஸ்வி சேகர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. இதையடுத்து, "அரவணைத்து" செல்வது என்று சொன்னால் "கட்டி புடிச்சிட்டே" போகுறதுனு அர்த்தமா என்ன?..... என்ன சார்.. நீங்க"என்று ட்விட்டர்வாசிகள் எஸ்வி சேகரை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.
பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் வார்த்தை மோதலும் நடந்து வருகிறது.. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "இது அரசியல் சண்டை போடும் நேரமல்ல.. எந்த கட்சியினராக இருந்தாலும், எல்லாத்தையும் மறந்துவிட்டு நாட்டு மக்களுக்காக, கொரோனா தொற்றை எதிர்த்து ஒன்றாக பணியாற்ற வேண்டிய நேரமிது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.. பகவத் கீதையை படியுங்கள்" என்று அட்வைஸ் தந்திருந்தார்.
இதை மேற்கோள் காட்டி பேராசிரியர் அருணன் தன்னுடைய ட்விட்டரில் "கீதை படியுங்கள்": கெஜ்ரிவால். திராவிடர் கழகம் கி.வீரமணி ஐயா எழுதிய 'கீதையின் மறுபக்கமும்' படியுங்கள்," என்றார். கெஜ்ரிவாலுக்கு அருணன் சொன்ன ட்வீட்டை எடுத்து ஷேர் செய்து எஸ்வி சேகர் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "அதைப்படிச்சு உங்களை போன்ற நாசமாய் போன மனுஷங்க திருந்தத்தான் கீதை படிக்க வேண்டும்... காலைல பல்லுகூட விளக்காம மூளை, மனசு பூர மலத்ததை வச்சுகிட்டு எழுதினா இப்படித்தான் வரும். தூ," என்றும் "நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் அவரைப்பாத்து குலைக்குது" என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
எஸ்வி சேகரின் இந்த ட்வீட் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது... அந்த அதிர்ச்சியே இன்னும் ஓயாத நிலையில், இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வீரமணி குறித்து மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார். "திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதுபோல வீடியோ கான்பரஸ் மூலமாவது அனைத்து கட்சிகளின் கருத்தை அறிய வேண்டியது தமிழக அரசின் கடமை.. இதில் வீண் ஜம்பம், கவுரவம் பார்க்க கூடாது. இந்த நேரத்தில் எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும்" என்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட எஸ்வி சேகர், "கொரோனா தடுப்புக்கு தள்ளி நிக்கச் சொன்னா இந்த அறிவாளி எல்லாரையும் அரவணைத்து செல்ல சொல்றாரு." என்று தெரிவித்துள்ளார். இதற்கு ட்விட்டர்வாசிகளும், "இத கூட புரிஞ்சுக்க தெரியாதா என்றும் உங்க அறிவைதான் மெச்சிக்கனும்... அரவணைத்து செல்வது என்று சொன்னால் கட்டி புடிச்சிட்டே போகுறதுனு அர்த்தமா என்ன?..... என்ன சார்.. நீங்க" என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.