பலமாகும் அதிமுக - பாஜக கூட்டணி.. ஐஜேகே கட்சி நிறுவனர் பாரி வேந்தர்- பியூஷ் கோயல் சந்திப்பு.. பின்னணி
சென்னை: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான பாரிவேந்தரை சந்தித்து பேசினார். இந்திய ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்தும் பணியில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி அதிமுக - பாஜக கூட்டணியில் இன்று டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்தது.

இது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாகும். இதையடுத்து பிற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் பியூஷ் கோயல் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் இன்று சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரை, பியூஷ் கோயல் சந்தித்து பேசினார்.
அப்போது பியூஷ் கோயலுடன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் இன்றைய சந்திப்பின்போது இந்திய ஜனநாயக கட்சி உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு பாரிவேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛ நீண்ட கால நண்பர் என்ற முறையில் பியூஷ் கோயல் என்னை சந்தித்தார். ஜனவரி 23ல் மதுராந்தகத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் மாநாட்டுக்கு வரும்படி பியூஷ் கோயலும், பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் அழைப்பு விடுத்தனர். 2014ம் ஆண்டில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே கட்சி இருந்து வருகிறது. 2026ம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்'' என்று கூறினார்.
முன்னதாக நேற்றைய தினம் ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛நாங்கள் ஒரு 6 தொகுதிகளுக்கு இலக்கு வைத்துள்ளோம். அதில் முன்னே, பின்னால் இருந்தாலும் பரவாயில்லை. தோழமை தான் முக்கியம். மதுராந்தகம் பிரதமர் மோடியின் மாநாட்டுக்கான அழைப்பு வரும் என்று எண்ணுகிறேன். அழைப்பு வரும் என்று நம்புகிறேன்.
நாங்கள் பாஜக கூட்டணியை தொடர தான் விரும்புகிறோம். ஏதாவது பிரச்சனை வந்தால் வேறு கட்சிக்கு போய்த்தான் ஆக வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் தனி சின்னத்தில் நிற்க விரும்புகிறோம். அதற்கான சின்னத்தை பெற விண்ணப்பம் செய்துள்ளோம்'' என்றார். இந்நிலையில் தான் இன்று பியூஷ் கோயல், பாரிவேந்தரை சந்தித்து நாளை மறுநாள் மதுராந்தகத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications