1 அல்லது 2 சீட்.. தலித் மக்களுக்கு துரோகம்.. திருமாவை திருத்தப் போகிறேன்.. சொல்வது கேபி ராமலிங்கம்!
நாமக்கல்: திமுக உடன் கூட்டணி அமைத்து திருமாவளவன் தலித் மக்களுக்கு துரோகம் செய்வதாக தமிழக பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 1 அல்லது 2 தொகுதிகளுக்காக விசிக இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழிநடத்திவிடக் கூடாது என்று கூறிய கேபி ராமலிங்கம், சிறந்த நண்பரான திருமாவளவனை சந்தித்து திருத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாஜக தரப்பில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாநாட்டை நடத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முடிவு செய்திருக்கிறார்.

பாஜகவின் அடுத்த திட்டம்
அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்க இரு கட்சிகளின் தலைமையும் ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இணக்கமாக இருக்கும் திமுக கூட்டணியை பிரிக்கவும் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் திருமாவளவனை பாஜகவினர் குறி வைத்திருக்கின்றனர்.
தங்கமணியை சந்தித்த கேபி ராமலிங்கம்
ஏற்கனவே நயினார் நாகேந்திரன், விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என்று சீண்டினார். தற்போது தமிழக பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம், திருமாவளவனை நேரில் சந்தித்து திருத்தப் போவதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். நாமக்கல் அதிமுக மாவட்ட அலுவலகம் வந்த கேபி ராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கேபி ராமலிங்கம் பேட்டி
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். திமுக எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் அதிமுக தான் தலைமை. அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
திருமாவளவனை திருத்துவேன்
அதேபோல் இன்னும் 10, 15 நாட்களில் திருமாவளவனை சந்திக்க உள்ளேன். தலித் வாக்கு வங்கி தொடர்பாக நண்பர் என்ற முறையில் திருமாவளவனை சந்தித்து திருத்த உள்ளேன். திமுக கூட்டணி திருமாவளவன் இருந்தால், தலித் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 1 அல்லது 2 தொகுதிகளுக்காக விசிக இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழிநடத்திவிடக் கூடாது.
திருமாவளவனின் துரோகம்
திமுக உடன் சேர்ந்து திருமாவளவன் தலித் மக்களுக்கு துரோகம் செய்கிறார். அந்த அணியில் இருந்து எங்கள் அணிக்கு திருமாவளவனை இழுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விசிகவை கூட்டணிக்கு அழைத்திருக்கும் சூழலில், கேபி ராமலிங்கம் நேரடியாக சந்திக்க உள்ளேன் என்று கூறி இருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications