திமுக மீது கை வைக்கும் பாஜக.. ராஜ்யசபா எம்.பியாகும் மு.க. அழகிரி... டெல்லி டீலிங் சக்சஸ்
சென்னை: நாட்டின் பல்வேறு கட்சிகளை பதம் பார்த்த பாஜக திமுக மீது இதுவரை கை வைக்காமல் இருந்தது. இப்போது ஆபரேஷன் லோட்டஸ் அஸ்திரத்தை திமுக மீது ஏவ களமிறங்கிவிட்டதாம் பாஜக.
தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பது டெல்லிக்கு தெரிந்த சங்கதிதான். இதனால்தான் தமிழக பாஜகவை தண்ணீர் தெளித்துவிட்ட பிள்ளை போல கண்டுகொள்ளாமலேயே இருந்தது டெல்லி.
தமிழகத்தில் நேரடியாக களமிறங்குவதற்கு பதில் யாரின் முதுகில் ஏறினால் அரியாசனம் கிடைக்கும் என்கிற குறுக்குவழிதான் பாஜக முன் உள்ள வாய்ப்பு. இதற்காகத்தான் மலைபோல ரஜினிகாந்தை அக்கட்சி நம்பியது. ஆனால் ரஜினிகாந்தோ இமயமலைக்குப் போவேனே தவிர அரசியலுக்கு வரமாட்டேன் என்கிற ரீதியாக நழுவிக் கொண்டே இருக்கிறார்.

கைவிரித்த ரஜினி
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதிமுக, திமுகவின் 2-ம் கட்ட தலைகளை வைத்து அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கலாம்; திமுகவின் சட்டசபை தேர்தல் வெற்றியை கலைத்துப் போட்டுவிடலாம் என்பதுதான் பாஜகவின் காத்திருந்த கனவு. ஆனால் ரஜினிகாந்தின் பேச்சும் செயல்பாடுகளும் இந்த ஒட்டுமொத்த கனவுக்கும் ஆகப்பெரும் வேட்டு வைத்து கொண்டே இருப்பதால் அக்கட்சியே வெறுத்துப் போய்விட்டதாம்.

திமுகவில் சலசலப்பு
இதனால் அடுத்த அஸ்திரங்களை கையில் எடுக்க தொடங்கிவிட்டதாம் பாஜக. இதன் ஒருபகுதிதான் தற்போது திமுகவில் கே.பி. ராமலிங்கம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சலசலப்பாம். திமுகவில் கட்சி தலைமைக்கு எதிராக கே.பி. ராமலிங்கம் போல இதுவரை அறிக்கை வெளியிட்டது இல்லை. ஏன் பிற கட்சிகளிலும் கூட அப்படி செய்வது இல்லை. கட்சி தலைமைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டால் கட்டம் கட்டுவார்கள் என்பது தெரிந்தே கே.பி. ராமலிங்கம் அறிக்கை விட்டிருக்கிறார் என்கிற போதே திட்டமிட்ட ஒன்றுதான் அரங்கேறுகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

களமிறங்கும் அழகிரி
ஏற்கனவே சேலம் வீரபாண்டி ஆ. ராஜா தரப்பு ஸ்டாலின் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது கே.பி. ராமலிங்கம் இணைந்திருக்கிறார். இந்த இருவருமே மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் என்பது ஒரு கருத்து. இப்போது திடீரென கொரோனா நோய் தடுப்பு நிதி என்கிற பெயரில் மு.க. அழகிரியும் ஊடகங்களில் அடிபடதொடங்கிவிட்டார். இவை அனைத்தும் ஒருபுள்ளியில் இணைவதை பார்த்தால் ஒரு பெரும் பிரளயத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஒன்று ஜெகஜோதியாக நடப்பட்டுவிட்டது என்பதாகவே தெரிகிறது.

இனியும் பொறுமை இல்லை
இது தொடர்பாக மு.க. அழகிரி ஆதரவாளர்களிடம் பேசுகையில், அண்ணன் இவ்வளவு பொறுமையாக இருந்து நாங்க பார்த்தது இல்லை. ஏனெனில் திமுக தரப்பு அப்படி ஒரு இழுத்தடிப்பு செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் எங்கேயும் தம்மால் கட்சி உடைந்தது என்பது வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வளவு பொறுமையாக இருந்து வந்தார். இப்போது ஸ்டாலினே ஒவ்வொருவரையும் எங்களது முகாமுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் அனுப்பிக் கொண்டே இருந்தால் நாங்களும் வெளியே பேச வேண்டியது வரத்தானே செய்யும் என கண்சிமிட்டுகின்றனர்.

அழகிரிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி
அதேநேரத்தில் பாஜக தரப்போ, மு.க. அழகிரியை பாஜகவில் சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அவருக்கு பிற மாநிலம் ஒன்றில் இருந்து ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படும். தமிழக பாஜகவுக்கு முருகன் தலைவராக இருந்தாலும் அவரே அழகிரி கட்டுப்பாட்டில்தான் போவார். இதுவரை பாஜக தலைவர்களாக இருந்தவர்களாள் ஒரு எள்முனையும் பயனில்லை என்பதால் அவர்களை ஓரம்கட்டி அடக்கி வைக்க இப்படி ஒரு அதிரடியை செய்ய தயாராகிவிட்டது டெல்லி மேலிடம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஒருவர் அழகிரியிடம் முழுமையான பேச்சுவார்த்தையை முடித்தும்விட்டார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications