கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரில் தொடங்கி ஜனநாயகன் படம் வரை விஜய்யின் செயல்பாடுகளை சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இதற்கு முன்பும் சிலர் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் அவரின் கட்சியினர் ஒருவர் 4 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று கூறியதுதான் வேடிக்கையாக உள்ளது.

அபத்தமான செயல்
இலவசத்தை எதிர்ப்பவன் நான் என்று சொன்னவர் விஜய். இப்போது அவரும் வீடு கொடுப்பேன், பைக் கொடுப்பேன் என்று இலவசங்களை அறிவிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு உள்ள ரூ.10 லட்சம் கோடி கடனை எப்படி தள்ளுபடி செய்ய போகிறார். அவருக்கு எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்வதை மட்டுமே நோக்கமாக வைத்துள்ளனர்.
ஜனநாயகன் படம் லீக் ஆனது வருத்தம் தான். வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும் தான் சொல்ல முடியும். படம் அவர்களின் கையில் தான் உள்ளது. அந்த ஹார்ட் டிஸ்க் சிபிஐயிடம் இல்லை. தணிக்கை வாரியம் எப்படி வெளியிட முடியும். இதை அவ்வளவு எளிதில் மூன்றாம் நபர் வெளியிட முடியாது. இதில் எல்.முருகன் மீது புகார் சொல்வது அபத்தமான குற்றச்சாட்டு.
டெபாசிட் கிடைக்காது
அரசியல் பற்றி பேச தெரியாமல் எதையோ பேசுகிறார். 1996 ஆம் ஆண்டில் இருந்து நான் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறேன். யாராது பேசினால் மக்கள் வேடிக்கை பார்க்க செல்வது இயல்பு. இதைவிட பெரிய கூட்டங்களை எல்லாம் பார்த்துவிட்டேன். ஒரு அசம்பாவிதம் நடைபெற்றதில்லை. விஜய் கன்ட்ரோலில் இல்லை.
41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்தா விசாரிப்பார்கள். இது என்ன செயல். உங்கள் ரசிகர்களையே உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதையுமே சொல்லாமல் வாக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எங்கும் போகாமல் பொம்மையையும், ஹாலோ கிராமிலும் கொண்டு வருகிறார்கள். இவர்களால் வெற்றி பெற முடியாது. டெபாசிட் கூட வாங்க முடியாது.
கொடநாட்டில்
மக்கள் சிறந்த தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள். இவரின் செயல்பாட்டை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர் என்பது அவருக்கு தெரியும். அதனால் தான் அவரைப்பற்றி பேசி கொடநாட்டில் கைக்கட்டி நின்றது போல ஆகிவிடகூடாது என்பதற்காக எங்கள் கூட்டணியை பற்றி பேசுவதில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications