பிரச்சனை இல்லையா.. 2 சீட் கொடுத்தால் திமுக கூட்டணியில் விசிக தொடருமா.. சீண்டும் நயினார் நாகேந்திரன்!
நெல்லை: திமுக சார்பாக 2 தொகுதிகளை கொடுத்தால் கூட விசிக கூட்டணியில் தொடருமா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் அளவிற்கு பெரிய பணிகள் இல்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையே தமிழ்நாட்டிற்கு போதும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்காக ஏராளமான வாகனங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாஜக தொண்டர்களும், இந்துத்துவ ஆதரவு அமைப்புகளும் வரவுள்ளனர். இந்த நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, இன்று காலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

நயினார் நாகேந்திரன் பேட்டி
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், கட்சி பேதமின்றி முருகனின் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அதேபோல் கீழடி விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று சொல்கிறார்கள். மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. இவர்கள் மத்திய அரசின் ஸ்டிக்கரை ஒட்டி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் புகைச்சல்
தமிழை மட்டுமே வைத்து கொண்டு திமுக ஓட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி எங்கு சென்றாலும், தமிழை பற்றி பேசி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து திருமாவளவன் அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்று பேசியது தொடர்பான கேள்விக்கு, திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கவலையில்லை.
2 சீட் கொடுத்தால் விசிக இருக்குமா?
என்ன ஆனாலும் திமுக கூட்டணியில் தொடருவோம் என்று திருமாவளவன் கூறுகிறார். அப்போது வெறும் 2 சீட் மட்டும் பெற்றுக் கொண்டு கூட்டணியில் தொடர்வார்களா? பாஜக தரப்பில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வலுவாக கூட்டணியாக உருவாகும். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதேபோல் பிரதமர் மோடிக்கு ஏராளமான பணிகள் உள்ளது.
மோடிக்கு வேலை இருக்கு
அதனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் அளவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. அதனால் மத்திய அமைச்சர் அமித்ஷாவே போதும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் விசிக தரப்பில் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறி இருந்தார். அதற்கு விசிக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
திருமாவை சீண்டும் நயினார் நாகேந்திரன்
இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை என்று வன்னி அரசு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் 2 தொகுதிகளை திமுக ஒதுக்கினால் கூட்டணியில் விசிக தொடருமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ச்சியாக விசிக மற்றும் திருமாவளவனை சீண்டி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications