தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் இப்படி சொல்லி இருந்தால் பாஜகவும் வந்திருக்கும்.. அண்ணாமலை பல்டி!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் கருத்து கேட்க அழைத்திருந்தால் நாங்கள் பங்கேற்று இருப்போம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டின் குரவளையை நெறிக்கிறது என்ற வகையில் கடிதம் எழுதி இருந்ததாகவும், அதனால் பாஜக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக மார்ச் 5ஆம் தேதி தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கான அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பாஜக, தமாகா, நாதக, புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் பங்கேற்கவில்லை. அதேபோல் இன்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை கண்டித்தும் தமிழக பாஜக சார்பாக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிவடைந்த பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு அறிவுரை கூற வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை. ஆளுங்கட்சியாக உள்ள பாஜக எதிர்க்கட்சியினர் அறிவுரைகளை கேட்டு வருகிறோம்.
ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வைக்கக் கூடிய குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்கள் அனைத்து கட்சிக் கூட்டம் என்று அழைக்கும் போது அறிவுரை சொல்லலாம் என்று அழைப்பு விடுக்கப்படவில்லை. அறிவுரை என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அப்போது மாநில உரிமை பறிபோகிறது, மத்திய அரசு நசுக்குகிறது, தமிழ்நாட்டின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்றுதான் கடிதம் எழுதினார்கள்.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் கருத்துகளை கூறுங்கள், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று சொல்லி இருந்தால் பாஜகவும் வந்திருக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டின் உரிமை எங்கேயும் பறிபோய்விடக் கூடாது. நாங்கள் இருப்பதே தமிழக உரிமையை காப்பதற்குதான். ஆனால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கும் போது, அவர்களின் அழைப்பு அப்படி சொல்லவில்லை.
ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று பேசியுள்ளார்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். விகிதாச்சார அடிப்படையில் எப்படி தொகுதி மறுசீரமைப்பு நடக்குமோ அப்படிதான் அடுத்த முறையும் நடக்கும்.
543 லோக் சபா தொகுதிகளில் தமிழ்நாட்டிற்கு 39 உள்ளது. அதன் விகிதாச்சாரம் 7.17 சதவிகிதம். அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளது. அவர்களுக்கு 14.7 சதவிகிதம் இருக்கிறார்கள். நாளை புதிதாக எத்தனை எம்பி-க்கள் வந்தாலும், இதே சதவிகிதம் தான் தொடரும். இன்றைய நிலையே தொடரும். அதனால் கூட்டத்தை போட்டு மத்திய அரசை திட்டுவது தவறு.
ஆனால் அதேபோன்று கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் எடுத்து செல்வோம். நமது கருத்தை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்பதில் தவறில்லை. பாஜகவை பொறுத்தவரை அனைவரிடமும் கருத்துகளை கேட்டிருக்கிறோம். ஜனநாயகத்தில் ஒரு கட்சி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றால் அழிந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications