மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்
சென்னை: மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன் திட்டமிடல் காரணமாக இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், பாஜக மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும், முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமைச் சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் சமூக நீதியை திமுக குழி தோண்டி புதைத்து வருவதாகவும், பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக எம்.பி.க்களை ஸ்டாலின் கண்டிக்காமல் அமைதி காப்பதாகவும் சாடினார். பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுகவினர் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்குள் உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கோயில்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மத்திய அரசை பொறுத்தவரை கருப்பு பணத்தை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளதாகவும், அதிலிருந்து பின்வாங்காது எனவும் கூறினார். இந்தியாவில் இருந்து இன்று பிற நாடுகளுக்கு முகக்கவசம், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், காட்மேன் என்ற வெப் சீரிஸ் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். திரைப்படங்களுக்கு போல் வெப் சீரிஸ் மற்றும் சீரியல்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தாம் வைப்பதாக முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications