தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி.. முதல்வர் தேர்விலும் மூக்கை நுழைக்குமா - 2021ல் என்ன நடக்கும்
நாம் கை காட்டுபவர்கள் தான் 2021ல் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள்.
சென்னை: பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உருவாகும் என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூட்டணி அரசுக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். பாஜவினர் கைகாட்டுபவர்கள் தான் 2021ல் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய நிலையில் பொன் ராதாகிருஷ்ணனும் இதற்கு ஆதரவு தெரிவிப்பது போல பேசியிருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் போதே ஆள் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி அனலை கிளப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் களமும் படுபரபரப்பாகவே இருக்கிறது பாஜக பக்கமிருந்து பல கருத்துக்கள் பேட்டிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பாஜக எம்எல்ஏக்கள் தமிழக சட்டசபைக்குள் நுழைவார்கள் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார் மாநிலத்தலைவர் எல்.முருகன். இதற்காக பல பரிசுகளையும் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி தொடருவதாகவும் கூறிய அதே நிலையில் நாங்கள் கை காட்டுபவர்தான் முதல்வர் என்று கூறியுள்ளார்.
பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார்... எல்.முருகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
பாஜக எம்எல்ஏக்கள்
பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்பும் மாவட்ட தலைவருக்கு இனோவா கார் பரிசளிக்கப்படும். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் கணிசமான எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் இருப்பார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது. அந்த கூட்டணியே தொடருகிறது என்றும் கூறினார்.
முதல்வரை பாஜக தேர்வு செய்யுமா
அதிமுகவில் கடந்த வாரத்தில் இருந்தே அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நாங்க கை காட்டுபவர்தான் முதல்வர் என்று பேசியுள்ளார் எல். முருகன். இதன் மூலம் தங்களின் கைப்பாவையாக யாரையாவது முதல்வராக பாஜக தேர்வு செய்யப் போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவிற்கு எதிர்ப்பு
புதிய கல்விக்கொள்கையில் அதிமுகவின் நிலைப்பாடு பாஜகவிற்கு எதிரானதாக இருக்கிறது. இருமொழிக்கொள்கையே தொடரும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
மறுக்காத எல். முருகன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, தமிழகத்தில் திமுக-அதிமுக என்ற நிலை மாறி, திமுக vs பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார். இதை இதுவரை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மறுக்கவில்லை.
நாங்க சொல்றவங்கதான் முதல்வர்
வி.பி.துரைசாமியின் கருத்து மற்றும் பாஜக தலைவரின் மவுனம் அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் சில அமைச்சர்கள் பேட்டியளித்து வந்தனர். இந்த நேரத்தில்தான் பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக கை காட்டுபவர்கள் தான் ஆட்சி கட்டிலில் அமருவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார்.
பொன். ராதா கிருஷ்ணன்
இது ஒருபுறம் இருக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். பாஜகவை பொறுத்தவரை வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உருவாகும் என்று கூறியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் இருக்கக் கூடிய நிலையில் தமிழக அரசியலில் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. 2021ல் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.