பாஜகவில் காலி பசங்க, ரவுடிகளை சேர்த்துட்டாங்க.. நான் ரொம்ப நாளா சொல்றேன்.. ராம சுப்பிரமணியம் ஆவேசம்
தமிழக பாஜக மீது இராமசுப்பிரமணியம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
சென்னை: "நான் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன்.. ரவுடிகளையும், காலிப்பயல்களையும், கொலைகாரர்களையும் பாஜகவில் சேர்த்துட்டாங்க. இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும்னு முன்னயே எனக்குத் தெரியும்" என்று பாஜகவின் ஆதரவாளர் இராமசுப்பிரமணியம்ஒரு பரபரப்பு கருத்தை முன்வைத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளர் இராம சுப்பிரணியம்.. இவர் பாஜக ஆழ்ந்த ஆதரவாளரும்கூட.. டிவி டிபேட்டுகளில் இராம சுப்பிரமணியம் என்றாலே தனி ஃபேமஸ்.
இவர் வித்தியாசமான பாஜக பிரமுகர்.. விவாதங்களில் பாஜக சார்பாகத்தான் இவரை அழைப்பார்கள்.. இவரும் பாஜகவை ஆதரித்து பேசுவார்.. ஆனால், பாஜக ஒரு தப்பு செய்தால், அதை துணிந்து சொல்வார்.. தாறுமாறாக விமர்சிக்கவும் செய்வார்.

புகழ்ச்சி
அதேபோல, எதிர்க்கட்சிகள் யாராவது நல்ல செயல்களை செய்தால், அதை மனசார பாராட்டுவார்.. வெளிப்படையாகவே புகழ்வார்.. இந்நிலையில், தமிழக பாஜகவில் சில பிரச்சனைகள் தலைதூக்கி உள்ளது.. எச்.ராஜா விவகாரம் முதல் ஊழல் குற்றச்சாட்டு வரை வெடித்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நக்கீரன் நாளிதழ் ராமசுப்பிரமணியத்திடம் ஒரு சிறப்பு பேட்டியினை எடுத்துள்ளது. அதில் உள்ள 2 கேள்விகளையும், அதற்கு ராமசுப்பிரமணியம் அளித்த பதில்களையும் மட்டும் இங்கு தருகிறோம்..
கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான நீங்கள், தற்போதுள்ள தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகளையும், இவர்கள்மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுப்பப்படுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் பா.ஜ.க.வில் தற்போது இல்லா விட்டாலும்கூட அந்த கட்சி நன்றாக வரவேண்டுமென்று விரும்பக்கூடிய ஆள். பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்தவன் நான். எனவே அந்த கட்சி இங்கே வளர்ந்ததென்றால் நான் ரொம்பவே சந்தோசப்படுவேன். தற்போது பா.ஜ.க.வில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக, அவர்களின் பின்புலம் என்னவென்றே தெரியாமல் அனைவரையும் கட்சியில் சேர்ப்பது கட்சிக்கு நல்லதல்ல.

ரவுடிகள்
இதுகுறித்து நான் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ரவுடிகளையும், காலிப்பயல்களையும், கொலைகாரர் களையும் அந்த கட்சியில் சேர்த்துட்டாங்க. இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும்னு முன்னயே எனக்குத் தெரியும். இதனை பல்வேறு ஊடகங்களில் விவாதங்களின்போது நான் பதிவு செய்திருக்கிறேன்.

நடவடிக்கை
தற்போது தமிழக பாஜக மீதான பாலியல் குற்றச்சாட்டெல்லாம் உண்மையா, பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இதெல்லாம் கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. முன்பெல்லாம் பாஜகவில் சேருபவர்களின் பின்புலத்தை விசாரித்தபின்னர் தான் சேர்ப்பாங்க... இப்போதெல்லாம் கமலாலயத்தினுள் சேர்ப்பதற்கு இதெல்லாம் விசாரிப்பதேயில்லை. இத்தகைய நடவடிக்கைகள்தான் குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணமாகிறது. இப்படியான நிலை துரதிர்ஷ்டமானது. இதைச் சரிசெய்யாமல் விட்டால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும்.

4 பேர் வெற்றி
தற்போது 4 பேர் வெற்றி பெற்றிருப்பதற்கு அதிமுகவின் ஆதரவு மட்டுமே காரணம். தமிழக பாஜகவின் பிரமாதமான வளர்ச்சியால்தான் இந்த வெற்றி என்று அவர்கள் நம்பினார்கள் என்றால், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். முருகன் நடத்திய வேல் யாத்திரை, பாஜகவுக்கு பெயிலியர் யாத்திரை என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். இது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கொள்கை
வாஜ்பாய் தலைமையில் 1998-ம் ஆண்டில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது பலரும் பாஜகவில் போட்டிபோட்டுக்கொண்டு இணைந்தார்கள். 2004-ம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் அனைவரும் அப்படியே விலகிவிட்டார்கள். அதுபோல தேர்தலுக்கு முன்பாக, கட்சிக்கொள்கை என்னவென்றே தெரியாத சினிமாக்காரர்கள் பலரையும் சேர்த்தார்கள். அவர்களெல்லாம் இப்போது என்ன ஆனார்களென்றே யாருக்கும் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications