பாஜக to அதிமுக ரிப்பீட்டு.. டைம் லூப்பில் அரசியல் பல்டி அடிக்கும் மைத்ரேயன்! தலையே சுத்துதே!
சென்னை: அரசியலில் டைம் லூப் டிராவல் செய்து வருகிறார் முன்னாள் எம்.பி மைத்ரேயன். ஆர்.எஸ்.எஸ், அதைத்தொடர்ந்து பாஜகவில் முக்கிய பதவிகளை வகித்த மைத்ரேயன் 2000ல் அதிமுகவில் இணைந்தார். மூன்று முறை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக செயல்பட்ட மைத்ரேயன், கடந்த ஆண்டு தான் பாஜகவுக்கு சென்றார். இப்போது பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
மைத்ரேயன் அரசியல் வாழ்க்கை: சென்னையைச் சேர்ந்த மைத்ரேயன் மருத்துவராப் பணிபுரிந்தவர். மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1991ஆம் ஆண்டு பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனார். அதன் பிறகு 1995 முதல் 1997 வரை பாஜக யின் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999ல் சில காலம் மாநில தலைவராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பாஜகவிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ராஜ்யசபா எம்.பியாக 3 முறை: கடந்த 2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2007, 2013 காலகட்டத்திலும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா இருக்கும்போது கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை மைத்ரேயனுக்கு அளித்திருந்தார்.
மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தபிறகு நடைபெற்ற அத்தனை பொதுத் தேர்தல்களிலும் அதிமுகவில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் மைத்ரேயனை இடம்பெறச் செய்திருந்தார் ஜெயலலிதா. டெல்லியில் தனக்கான நம்பிக்கையான நபராக மைத்ரேயனை வைத்திருந்தார் ஜெயலலிதா.
அதிமுக அணிகளுக்குள் பல்டி: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன். பின்னர் ஓபிஎஸ், எடப்பாஇ பழனிசாமியுடன் கைகோர்த்தபோதும், 2019ல் மைத்ரேயனுக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து, கடந்த 2022 அக்டோபரில் எடப்பாடி பழனிசாமியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார் மைத்ரேயன்.

பாஜகவில் இணைந்தார்: 23 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்து வந்த மைத்ரேயன், கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி, டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், "23 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன். பாஜக பல சாதனைகளைச் செய்திருக்கிறது. பாஜக பட்டாளத்தில் ஒருவனாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணிகளைச் செய்து வருகிறார். அவருடன் இணைந்து செயல்படுவேன்." எனத் தெரிவித்திருந்தார்.
மீண்டும் அதிமுகவுக்கு தாவல்: மைத்ரேயனுக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை வழங்கி இருந்தது பாஜக தலைமை. இந்நிலையில், மைத்ரேயன் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். பாஜகவில் பெரும் எதிர்பார்ப்புடன் மைத்ரேயன் இணைந்த சூழலில், அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம், தான் மீண்டும் அதிமுகவில் இணைய விரும்புவதாக கூறி கடிதம் அளித்துள்ளார் மைத்ரேயன். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, இன்று மைத்ரேயனை தனது வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்ததோடு, அவரை கட்சியிலும் இணைத்துக் கொண்டுள்ளார்.
டைம் டிராவல் லூப்: ஆர்.எஸ்.எஸ், அதன் வழியாக பாஜக, அங்கிருந்து அதிமுக. அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி, மறுபடி ஓபிஎஸ், பிறகு பாஜக - இப்போது அதிமுக என அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு "ரிப்பீட்" மோடில் அரசியல் பயணம் செய்துள்ளார் மைத்ரேயன். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மாநாடு' திரைப்படம் போல அதிமுக - பாஜக - ரிப்பீட்டு எனப் போய்க் கொண்டிருக்கிறது மைத்ரேயனின் அரசியல் பயணம்.













Click it and Unblock the Notifications