3 "ஜாம்பவான்கள்".. பெரிய மீனை வெயிட்டிங்க்ல போடு.. சின்ன மீன்களை அள்ளி போடு.. பாஜகவின் பலே திட்டம்!
தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற பலே திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது
சென்னை: தமிழக அரசியலில் ஒரு புது தகவல் றெக்கை கட்டி பறந்து வந்து கொண்டிருக்கிறது. முக்கிய பிரபலங்கள் 3 பேருக்கு பாஜக வலை விரித்து வருகிறதாம்.. அவர்கள் 3 பேருமே திரையுலக ஜாம்பவான்களான சரத்குமார், டி.ராஜேந்தர், பாக்கியராஜ் ஆகியோர்தான்!
பாஜக என்றாலே பிராமணர்களுக்கான கட்சி, நாடார் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி, கவுண்டர் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி என்ற பெயர் உள்ளது. இதைத் தாண்டி வேறு சமூகத்தினர் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை..

இன்னும் ஓபனாக சொல்லபோனால், ஆர்எஸ்எஸ் - பிராமணர் ஆதரவு கட்சியாகவே இது பார்க்கப்படுகிறதே தவிர தமிழகத்தில் இந்தக் கட்சியை யாரும் தேசியக் கட்சியாக பார்க்கவில்லை..
காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அங்கீகாரம் கூட இந்த விஷயத்தில் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை... அதனால்தான் இதை உடைக்கும் வேலையில் இறங்குமாறு பாஜக மேலிடம் ஏற்கனவே தமிழக பிரிவை வலியுறுத்தி வந்தது... அதற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காதவர்கள், கட்சி தலைமையால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள், சில முன்னாள் பதவிக்காரர்கள் என அவர்களை தங்கள் கட்சியில் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், கவர்ச்சிகரமான பிரமுகர்களும் பாஜகவுக்கு தேவை என்பதை உணர்ந்தே ஜீவஜோதி போன்ற அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்களையும் உள்ளே இழுத்து வந்தது.
ரஜினி போன்ற பெரிய தலைகளை தம் பக்கம் இழுக்க பாஜக எவ்வளவோ முயன்றது. ஆனால் அவரோ நழுவிக் கொண்டு போனாரே தவிர வழிக்கு வருவது போலத் தெரியவில்லை. அதேசமயம், பல விஷயங்களில் அவரது நிலைப்பாடு பாஜக ஆதரவுதான். எனவே ரஜினியை வெயிட்டிங்கில் வைத்து விட்டு இப்போது வேறு பிரபலங்கள் பக்கம் பாஜக கவனம் திருப்பியிருப்பதாக தெரிகிறது.அந்த வகையில், 3 பேரை கொக்கி போட்டு வருகிறது.. சரத்குமார், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஆகியோருக்கு நூல் விட்டு இழுத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடார் சமுதாயத்தை தன் வசப்படுத்த ஏற்கனவே சசிகலா புஷ்பாவை களமிறக்கிய நிலையில், சரத்குமாரையும் நாடியுள்ளதாக தெரிகிறது.. சரத்குமாருக்கு அரசியல் அனுபவத்துடன் ஓரளவு சாதிய வாக்குகளும் உள்ளதால் அதை சாதகமாக்க பாஜக முயல்கிறது.. அதேபோல பாக்யராஜை வைத்து கொங்கு மண்டல வாக்குகளை அள்ள திட்டம் உள்ளதாக தெரிகிறது.. டி.ராஜேந்தர் தனியாக கட்சியை வைத்திருந்தாலும், அதை எந்த அளவுக்கு செயல்பாட்டில் வைத்துள்ளார் என தெரியவில்லை.
ஆனால் பாஜக தேர்வு செய்துள்ள இந்த 3 பேருமே பிரபலமானவர்கள்.. தமிழகம் அறிந்தவர்கள்.. அரசியல் அனுபவம் பெற்றவர்கள்.. தனி ரசிகர் கூட்டத்தையும், தொண்டர்களையும் இப்போது வரை தக்க வைத்து வருபவர்கள்.. மேலும் தேர்தலின்போது, இவர்களின் பிரச்சாரம் நிச்சயம் மாற்றத்தை தரும் என்றும் பாஜக நம்புகிறது.
ஒருவேளை இவர்கள் 3 பேரையும் பாஜக அணுகிய தகவல் தகவல் உண்மையாக இருப்பின், இந்த முடிவினை 3 பேரும் எப்படி எதிர்கொள்வார்கள்? என தெரியவில்லை. ஆனால் வலுவான பொறுப்பு பதவி இருந்தால் மட்டுமே சரத்குமார் ஒப்புக் கொள்வார் என்றே தெரிகிறது.. அதேபோல, பாக்யராஜ், டி.ராஜேந்தர் இருவரும் வந்த வாய்ப்பை மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை எச்.ராஜா சொல்லியிருந்தார், "திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது" என்று... ஆனால், திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழ்நாட்டில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தை பாஜக இப்போதுதான் மெல்ல உணர்ந்து வருகிறது.. அதனால்தான் எப்படியாவது இங்கு கால் ஊன்ற எடுத்துவரும் முயற்சிகளுள், இந்த மூவரின் வருகையையும் எதிர்பார்த்து கொக்கி போட்டுள்ளதாகவே கருதப்படுகிறது!












Click it and Unblock the Notifications