பறந்த உத்தரவு.. "இது எப்படி நடந்தது?".. டெல்லி போட்ட போடு.. திக்குமுக்காடிய தமிழக பாஜக
கிருஷ்ணகிரி பாஜக பாலகிருஷ்ணன் மீது மேலிடத்துக்கு வருத்தம் உள்ளதாம்
சென்னை: கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த முக்கிய தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் கசிந்துள்ளது..!
ராஜேந்திர பாலாஜியை பொறுத்தவரை, இவர் அதிமுக நபரா? பாஜகவை சேர்ந்தவரா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு கடந்த காலங்களில் நடந்து கொண்டவர்.
பாஜகவுடன் எந்நேரமும் நெருக்கமாக இருக்கும் ஓபிஎஸ்ஸுக்கே, டஃப் தரும் அளவுக்கு பாஜகவை தூக்கி பிடித்தார்.. இதை தமிழகமே பார்த்தது..!

கைது நடவடிக்கை
இவர்மீதான வழக்கு துரிதமானதையடுத்து, போலீசாரும் எந்நேரமும் கைது செய்யப்பட்டுவிடுவார்கள் என்பதை அறிந்து, முன்கூட்டியே தலைமறைவாக இருக்க தயாரானார் ராஜேந்திர பாலாஜி.. பாஜக மேலிடம் தன்னை எப்படியும் காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிருந்தார்.. கடைசிவரை அது நடக்கவில்லை.. இறுதியில் கைதாகி சிறையில் உள்ளார்.. முன்னதாக, தமிழக காவல்துறையின் தனிப்படை கைது செய்தபோது, அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்..

பாலகிருஷ்ணன்
இந்த சம்பவம் தமிழக பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜகவின் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதை மத்திய உளவுத்துறையினர், அப்போதே டெல்லிக்கு நோட் போட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியோடு பாலகிருஷ்ணனுக்கு என்ன தொடர்பு? தமிழக போலீசாரால் தேடப்பட்ட ஒரு நபருக்கு எந்த அடிப்படையில் அடைக்கலம் கொடுத்தார்? என்கிற தகவல்களை தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் பாஜகவின் தேசிய தலைமை கேட்டிருக்கிறதாம். இதுகுறித்து, தமிழக பாஜக நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரித்திருக்கிறாராம் சி.டி.ரவி.

அப்செட்
அதேபோல இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. சிறையில் தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம், யாரையும் பார்த்துப் பேசும் மனநிலையில் நான் இல்லை.. என்று சொந்த கட்சிக்காரர்களையும், சொந்தக்காரர்களையும் தவிர்த்து வருகிறாராம் ராஜேந்திர பாலாஜி.. முக்கியமாக எடப்பாடி, ஓபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.. இவர் தலைமறைவாக இருந்த காலகட்டத்திலிருந்து கைது செய்யப்பட்டது வரை எடப்பாடியும் சரி, ஓபிஎஸ்ஸூம் சரி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருக்கிறதாம்.

அதிமுக
இன்னும்சொல்ல போனால், தன்னை பாதுகாக்க பாஜக நிர்வாகிகள் சிலர் உதவியிருக்கிறார்கள், ஆனால் அந்த உதவியைகூட அதிமுக தரப்பில் செய்யவில்லையே என்ற வேதனையும் கூடியிருக்கிறதாம்.. இப்படி உதவி செய்ய போயிதான், இன்று அந்த பாஜக நிர்வாகிகளுக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..

ஊழல்வாதிகள்
பாஜகவை பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்து வருகிறது.. அதன்படி, ஊழலுக்கு ஒருக்காலும் துணைபோனதில்லை.. அப்படி துணை போவதற்கான சூழலையும் வளர்த்து கொள்வதில்லை.. மாறாக, ஊழல்வாதிகள் யார் யாரென்று பார்த்து, அந்த லிஸ்ட்டை கையில் எடுத்து வைத்துக் கொள்ளும்.. அதன்படி, அவர்களை ஆட்டுவிக்கும்.. இதுதான் பாஜகவின் முக்கிய வியூகங்களில் ஒன்று.. அதனால்தான், ஊழல்வாதிகளுக்கும்சரி, ஊழல் புகாரில் பெயர் அடிபட்டவர்களுக்கும் சரி, ஒருபோதும் உதவியது கிடையாது..

ஜெயலலிதா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறந்தபோதுகூட, மேலிட தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.. கிட்டத்தட்ட ராஜேந்திர பாலாஜியின் நிலைமையும் அப்படித்தான்.. என்னதான் பாஜகவுக்கு ஆதரவாக அவர் பேசினாலும், டாடி என்ற உறவுமுறையுடன் நெருங்கினாலும், தன் கொள்கைப்பிடிப்பில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதே உண்மை.. அதற்காகத்தான் இன்று பாலகிருஷ்ணனும் சிக்கி உள்ளார்..!












Click it and Unblock the Notifications