அதிமுகவை அழிக்க பார்க்கிறதா பாஜக? அண்ணாமலை அப்படி பேச இதான் காரணம்.. டிடிவி தினகரன் சொல்றதை பாருங்க
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பதால் தான் அதிமுக பலவீனமடைந்து வருவதாகவும், அதனால் தனது தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலையில் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. அதிமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக கடைசிவரை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ பன்னீர் செல்வம், பாமக உள்ளிட்ட கடசிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது, பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள்" என்று பேசியிருந்தார். அதேபோல, அதிமுகவை காலி செய்து அதன் வாக்கு வங்கியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சிலரும் கருத்து கூறினர்.
இந்த நிலையில் தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் இது தொடர்பாக பேசினார். டிடிவி தினகரன் கூறியதாவது:- எல்லாரும் என்ன சொன்னாங்க.. பாஜக வந்து அதிமுகவை அழிக்க போகிறது என்றும், அதிமுகவை அழித்து தான் பாஜக வளரப்போகிறது என்று சொன்னாங்க.. ஆனால் இதனை பொய் என்று அக்கட்சியின் தலைவராக அண்ணாமலையே சொல்லியிருக்கிறார்.
இதேபோல், அதிமுக என்ற கட்சி தேர்தலுக்கு பிறகு என் தலைமையில் என்று அவர் சொல்லியிருப்பது, எந்த அடிப்படையில் சொல்கிறார் என்றால், உண்மையான அம்மாவின் தொண்டர்களின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை இருப்பதனால் அவர் இப்படி சொல்கிறார்.
சுயநலவாதியாக, ஒரு துரோக சிந்தனை உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பதால் தான் அதிமுக பலவீனமடைந்து வருகிறது. அது மீண்டும் நல்லா இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற தலைவர்கள் தலைமை வகிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அண்ணாமலை பேசும் போது, "தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அதிமுக கட்சி தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் நிற்பார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது.
இதை நான் வெளிப்படையாகவே சொல்வேன். இப்படி சொல்ல சொல்ல தயக்கமோ, பயமோ எனக்கு இல்லை. 2021 தேர்தலில் தினகரன் கூட்டணியில் இருந்திருந்தால் ஸ்டாலின் முதல்வராகியிருக்க மாட்டார்" என்று பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications