"தாமரையில் குஷ்பு".. முருகன் அன்னைக்கு சொன்னதெல்லாம் அடுத்தடுத்து நடக்கும் போலயே..!
குஷ்புவையும் இழுத்து கொண்டது பாஜக
சென்னை: அடுத்தடுத்த வியூகங்களை பார்த்தால், தனித்தே தேர்தலை சந்திக்கும் முயற்சியில் தமிழக பாஜக இறங்கினாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்ற கருத்துக்கள் பரவலாக எழுந்து வருகின்றன.
கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக நல்ல பாடத்தை கற்று கொண்டிருக்கும் போல தெரிகிறது.. அதனால்தான் இப்போது வரை கூட்டணி, சீட் என்று வாய் திறக்காமல் உள்ளது. அதேசமயம், அதிமுகவின் நடவடிக்கைகளை அப்பட்டமாக பார்த்தாலும், பாஜக தன் அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறது.
எம்பி தேர்தலின் தோல்வியின்போது, அதிமுக தங்களை மதிக்கவே இல்லை என்று அமித்ஷாவிடம் குற்றஞ்சாட்டியதாக சொல்லப்பட்ட யாருமே, இப்போது மவுனம் மட்டுமே காத்து வருகின்றனர்.. இந்த அமைதி பாஜக தரப்பை உசுப்பேத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் அடுத்த அதிரடிகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறதாம்.

தலைமை
பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும் என்று அன்று அக்கட்சியின் துணைத்தலைவர் விபி துரைசாமி பேசியிருக்ககூடாது என்றும், அவர்தான் இருக்கின்ற உரசலை மேலும் அதிகமாக்கிவிட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.. துரைசாமி பேச்சு அதிமுகவிற்கு கடுமையான கோபத்தை அப்போது ஏற்படுத்தியது. இதற்கு பிறகு எல்.முருகன் பேச்சும் வார்த்தை மோதல்களை ஏற்படுத்தும்படியாகவே இருந்தன... தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் என மூத்த தலைவர்கள் எல்லாருமே அதிமுகவை குறி வைத்து பேசியது அக்கட்சியை மேலும் சீண்டிவிட்டுவிட்டது.

அதிரடிகள்
இந்த சமயத்தில்தான் பல்வேறு அதிரடிகளை பாஜக கையில் எடுத்திருக்கிறது.. கொள்கை ரீதியாகவே அதிமுகவும் பாஜகவும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்று அக்கட்சி சொன்னாலும், வேளாண்மை திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதை பார்க்க முடிகிறது என்று ஆதரவு வலை வீசினாலும், தனித்து போட்டியிடும் என்ற முடிவினையும் பரிசீலித்தே வருகிறது. அதாவது முழுக்க முழுக்க அதிமுகவை நம்பவும் பாஜக தயாராக இல்லையாம்.

தனித்து போட்டி
"2016 ல் தனித்து போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது.. அதுபோலவே இந்த முறையும் பெருவாரியாக நிர்ணயிக்கும்" என்பதை எல்.முருகன் விடாமல் சொல்லி வருவதே இதற்கு உதாரணம்.. முருகன் மட்டுமில்லை, பாஜகவின் அண்ணாமலையும் ஒரு பேட்டியில், "தனித்து போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு பலம் இல்லாமல் இல்லை.. 75 ஆயிரம் பூத்துகளிலும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.. தனித்துப் போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்றாரே தவிர, அதிமுகவுடன்தான் கூட்டணி என்ற ஒரே உறுதியாக சொல்லவில்லை.

கவர்ச்சி அரசியல்
மற்றொரு புறம், கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஜரூராக நடந்து வருகிறது.. வடமாநிலங்களில் எப்படி நடிகர், நடிகைகளை களமிறக்கி கவர்ச்சி அரசியலில் பாஜக இறங்கி உள்ளதோ, அதுபோலவே தமிழக பாஜகவும் வேலையை தொடங்கும் என்று தெரிகிறது.. இப்போது குஷ்பு உள்ளே செல்கிறார்.. குஷ்பு தங்களுடன் இணைந்தால் மகிழ்ச்சி என்று முருகனே அன்று வெளிப்படையாக அழைப்பு விடுத்ததையும் இன்று நினைவுகூர வேண்டி உள்ளது.. அதேபோல, அடுத்து கருணாஸ் வருவார் என்று சொல்கிறார்கள்.

கருணாஸ்
திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவான கருணாஸ், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் நீடிப்பாரா அல்லது திமுகவுக்கு கூட்டணிக்கு செல்வாரா? என்ற சந்தேகம் எழுந்தபடியே இருந்தது. இந்த சமயத்தில்தான், அவரை தங்கள் கட்சியில் இணைக்க, திரைமறைவு பேச்சினை தமிழக பாஜக தரப்பினர் தொடங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.. இதில், எந்த பக்கம் கருணாஸ் செல்வார் என்பது தெரியவில்லை.

கோரிக்கை
ஆனால், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்பது அவர் தரப்பின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.. இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றினால், பாஜகவில் முக்குலத்தோர் புலிப்படையை இணைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால், கருணாஸ் தரப்பின் ஓட்டுக்களையும் பாஜக இழக்க தயாராக இல்லை. இந்த அதிரடிகளை எல்லாம் பார்த்தால், பாஜக தனித்து நின்றாலும் வியப்பில்லை என்றே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications