”அண்ணாமலை ஒரு ஐபிஎஸ்.. நீங்க 3வது மட்டுமே படிச்சவரு?” செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக நிர்வாகி
சென்னை: பாஜகவினரை காக்கா கூட்டம் என்று விமர்சித்ததற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாஜக நிர்வாகி புகழ்வதைபோல் எச்சரிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையே எதிர்க்கட்சிபோல் அரசுக்கு எதிராக பேசி வருவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
பாஜக அதிமுகவை அதிகாரம் செலுத்துவதாகவும் கூறப்பட்டது. இதனால் அடிக்கடி இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது அந்த உரசல் அதிகரித்து இருக்கிறது.

பொன்னையன் பேச்சு
அண்மையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "தமிழ் மக்களின் பிரச்சனைக்காக தமிழ்நாடு பாஜக போராடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடாமல் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் பாஜகவின் கூற்றுகளை, உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அதை மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ்நாடு பாஜக மக்களுக்காக பாடுபடவில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்." என்றார்.

பாஜக எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என விமர்சித்தார். 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜகவே எதிர்க்கட்சியாக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணனும், பாஜகவினர் விமர்சித்தால் அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

செல்லூர் ராஜு பேச்சு
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு," பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜ.கவுக்கு கூடுவது காக்கா கூட்டம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம்." என்று பேசினார்.

பாஜக நிர்வாகியின் செல்போன் உரையாடல்
இந்த நிலையில் செல்லூர் ராஜுவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், செல்லூர் ராஜுவை கடுமையாக சாடி பேசியுள்ளார். "அரசியலுக்கு வருவதற்கு முன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருநீறு விற்றீர்கள்தானே?" என்று சுரேஷ்குமார் கேட்க பிரசாதம் விற்றேன் என பதிலளித்தார் செல்லூர் ராஜு.
Recommended Video

3 ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர்
தொடர்ந்து பேசிய சுரேஷ், "அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி, நீங்கள் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஆளு, என்னென்ன சாதனை செய்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், தெர்மாக்கோல் விட்டு தமிழ்நாட்டையே அலறி விட்டவர். நீங்கள் அவ்வளவு பெரிய விஞ்ஞானி." என்று விமர்சித்துள்ளார். இது அனைத்தையும் கோபப்படாமல் செல்லூர் ராஜு அமைதியாக கேட்கும் ஆடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications