கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏக்கள்.. என்ன மேட்டர்?
சென்னை: பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை மாற்ற வலியுறுத்திய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சகட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடா அருள் ஆகியோரின் பதவியை பறிக்க வேண்டும் என பாமக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த அன்புமணி தரப்பு பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சட்டப்பேரவை பாமக குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும். எம்எல்ஏ அருளின் கொறடா பதவியை பறிக்க வேண்டும். தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை பேரவை பாமக குழு தலைவராகவும், மயிலம் எம்எல்ஏ சிவகுமாரை கொறடாவாகவும் நியமிக்க வேண்டும் கோஷமிட்டனர்.
இந்நிலையில், பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மூவரும் கருப்புச் சட்டை அணிந்தபடி ஒன்றாக சட்டசபைக்கு வருகை தந்தனர்.
"எங்களது கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரவையில் பாமக குழு தலைவர், துணை தலைவர் மற்றும் கொறடாவுக்கு இருக்கைகளை தனியாக வழங்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். பின்னர் பேசி கொள்ளலாம் என்று பேரவை தலைவர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும்" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications