Blue Moon: ப்ளூ மூன்.. விண்கற்கள் மழை.. மே மாதத்தில் வானில் நடக்க போகும் அரிய நிகழ்வுகள்.. எப்போது பார்க்கலாம்?
சென்னை: மே மாதத்தில் "ப்ளூ மூன்" தோன்றுகிறது. ஏற்கனவே 1 ஆம்தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில், மே 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றுகிறது. இதுபோக மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" வானில் இந்த மாதம் தோன்ற உள்ளது. வெறும் கண்ணாலேயே பார்க்க கூடிய இந்த அரிய நிகழ்வுகள் எப்போது வானில் தோன்றும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
நடப்பு மே மாதத்தில் வானில் சில அதிசய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த மாத இறுதியில் ப்ளூ மூன் தோன்றுகிறது. ப்ளூ முன் என்பதால், நிலா, வானத்தில் நீல நிறமாக தோன்றுமோ என நினைக்க வேண்டாம். இந்த ப்ளூ மூன் என்பது ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றுவதை குறிப்பார்கள்.

ப்ளூ மூன் - எப்போது, எப்படி பார்க்கலாம்?
அதாவது, இந்த மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றுகின்றன. மே 1 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றிய நிலையில் மே 31 ஆம் தேதியில் பவுர்ணமி வருகிறது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வருவதே ப்ளூ மூன் ஆகும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவது எப்போதாவது ஒருமுறை நடக்கூடிய நிகழ்வு என்பதால், இந்த நிகழ்வுக்கு ப்ளூ மூன் என்று சொல்கிறார்கள்.
விண்கல் மழை நிகழ்வு
இதோடு மற்ற ஒரு நிகழ்வு இந்த மாதம் நிகழப்போகிறது. அதாவது, மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எட்டா அக்வாரிட் எனப்படும் விண்கல் மழை நிகழப்போகிறது. வானில் ஒளிக்கீற்றுகளாக இந்த இரண்டு நாட்களில் கண்ணுக்கு புலப்படும். ஹாலே வால் நட்சத்திரத்திலிருந்து உருவான துகள்கள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், ஹாலே வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி தடத்தை பூமி கடந்து செல்லும் போது, அந்தச் சிறிய துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிவதால், வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாக தெரிகின்றன. இந்த விண்கற்கள் மிகவும் வேகமாக பயணிக்கும். பூமியின் வளிமண்டலத்துக்குள் சுமார் வினாடிக்கு 40 மைல் (64.37 கிலோமீட்டர்) வேகத்தில் நுழைகின்றன.
50 விண்கற்கள் வரை பார்க்க முடியும்
நிலவு வெளிச்சத்தில் இதனை காண முடியாது என்றாலும், அதிகாலை வேளையில் பிரகாசமான விண்கற்களை காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டெலஸ்கோப் இன்றி சாதாரணமாகவே வெறும் கண்களால் பார்க்க முடியுமாம். வானில் உகந்த சூழல் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 50 விண்கற்கள் வரை பார்க்க முடியும். இந்த ஹாலே வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் உள்பகுதியில் இதற்கு முன்பாக கடந்த 1986 ஆம் ஆண்டு வந்தது. இனி 2061 ஆம் ஆண்டு வரை இந்த அரிய நிகழ்வானது நடைபெறாது.
மற்றொரு அதிசய நிகழ்வு
இதுபோக மே 18 ஆம் தேதி ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்குத் திசையை நோக்கி பாருங்கள். அப்போது பிறை நிலவு, பூமியில் இருந்து தென்படும் மிகப் பிரகாசமான கோளான வெள்ளிக்கு அருகில் தோன்றும்.

அதிக பிரகாசமான இந்த வெள்ளி கிரகம் மாலை நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வானில் இவை இரண்டும் நெருக்கமாக இருப்பது போல தோன்றினாலும், உண்மையில் இந்த இரண்டு கோள்களுக்கு இடையே கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு உள்ளது.














Click it and Unblock the Notifications