சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரட்டை குண்டு வெடிப்பு- 14 பேர் காயம், பெண் பலி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ஏழரை மணியளவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுளளது.
ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. 9வது பிளாட்பாரத்திற்கு ரயில் வந்து சேர்ந்தபோது குண்டு வெடித்தது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் சேதமடைந்தன.

குண்டுவெடிப்பில் 14 காயமடைந்துள்ளனர். அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் ஒரு உயிர்ப்பலி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் பெயர் சுவாதி. 22 வயதான பெண். இதை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.

எஸ் 4- எஸ் 5 பெட்டிகளில்
குவஹாத்தி- பெங்களூர் இடையிலான இந்த ரயில் சென்னை வழியாக செல்வதாகும். இன்று காலை இந்த ரயில் 9வது பிளாட்பாரத்திற்கு வந்தபோது அதன் எஸ் 4, மற்றும் எஸ் 5 பெட்டிகளில் குண்டுவெடித்தது.

ஐஎஸ்ஐ உளவாளி கைது செய்யப்பட்ட நிலையில் குண்டுவெடிப்பு
சென்னையில் சில நாட்களுக்கு முன்புதான் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன.
இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.

யார் காரணம்...?
இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸார் முதல் கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் போலீஸார் முற்றுகையிட்டு அந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
என்ன மாதிரியான குண்டுவெடித்தது என்பது குறித்து அறிய வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications