அலறவிடும் இ-மெயில்.. சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிரமான சோதனை - ஒரே பரபரப்பு
சென்னை: டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மாலை நேரத்தில் மக்களின் பொழுதுபோக்கு இடமாக கடற்கரை பகுதிகள் விளங்கி வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்து வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் மக்கள் அதிகம் குவியும் கடற்கரை பகுதிகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னை காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று டிஜிபி அலுவலகத்துக்கு மெயில் ஒன்று வந்து இருந்தது. அந்த மெயிலில் சென்னை மெரினா கடற்கரை, மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதற உள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாகும். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் அந்தந்த இடங்களுக்கு விரைந்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது வந்த இ-மெயிலில் யாருடைய பெயரும் இல்லை. இதனால் இ-மெயில் முகவரியை வைத்து போலீசார் மிரட்டல் விடுத்த நபர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் நாட்டில் பல்வேறு இடங்களில் இப்படியான வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் அடிக்கடி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
நேற்று மும்பையில் செயல்பட்டு வரும் ஆர்பிஐ வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வங்கிகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன. இதில் தொடர்புடைய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 11 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதற்கு முன்பாக பெங்களூரில் மொத்தம் 68 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த 2 மிரட்டல் சம்பவங்களுக்கு புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தான் சென்னைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளியாக இருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். இருப்பினும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் இருக்கும் வகையில் சென்னை போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் மிரட்டல் வந்த 30 இடங்களிலும் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications