சென்னை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. விடிய விடிய நடந்த சோதனை! விமானங்கள் தாமதம்!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை விமான நிலையம் வழக்கம்போல் நேற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் விமான நிலைய மேலாளர் அறைக்கு வெளிநாட்டு முகவரியில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், 'விமான நிலைய கழிவறைகள் மற்றும் விஐபிகள் ஓய்வு எடுக்கும் அறைகளில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்து சிதறும் முன் தப்பித்துக் கொள்ளுங்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இதுகுறித்து விமான நிலைய இயக்குநருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அவசரகால பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதன் பின்னர், விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட விஐபி ஓய்வு எடுக்கும் அறைகள், கழிவறைகள் மற்றும் விமான நிறுத்த இடம், பயணிகள் அமரும் இடம், விமானம் எரிபொருள் நிரப்பும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
விடிய விடிய வெடிகுண்டு சோதனை
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், இது வழக்கமாக வரும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்த, சோதனையில் பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்ததால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, ஃபிராங்பார்ட், தோகா, சார்ஜா உள்ளிட்ட சர்வதேச விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக, விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
முன்னதாக சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை வந்த போனில், எதிர்முனையில் பேசிய நபர் 'முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்' எனக் கூறி இணைப்பை துண்டித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் வீட்டு வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்து பார்த்தனர்.
சோதனைக்கு பின்னர் சந்தேகப்படும்படி எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த ஆசாமியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதேபோல், நேற்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்து போன் இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து, நீலாங்கரை போலீஸார் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கும் சந்தேகப்படும்படி எந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த மிரட்டலும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications