“உழைப்பால் உயர்ந்தவங்க நாங்க.. ஆடிட்டர், டாக்டரா மட்டும் பிராமணாள் வேணுமா?” - முரசொலிக்கு கண்டனம்!
சென்னை : துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை கொண்டு வந்த தி.மு.க அரசை ஓசி மாடல் என மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதையொட்டி, குருமூர்த்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலையில் பிறந்த பிறவி ஒன்று உளறி இருக்கிறது. பூர்வீகமே தட்சணையில் வாழக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதி, ஓசியைப் பற்றி பேசலாமா என முரசொலி நாளேடு சாடியது.
இந்நிலையில், பிராமணர்களை இழிவாக எழுதிய முரசொலி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோபம் காட்டிய குருமூர்த்தி..! உறுதியாக நிற்கும் அண்ணாமலை! இந்தி விவகாரத்தில் மீண்டும் வார்த்தை போர்!
துக்ளக்
துக்ளக் இதழின் ஆண்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில், பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இப்போது ஆட்சி செய்கிற தி.மு.க அரசு பேருந்தில் பெண்கள் காசின்றி பயணித்தால் அது ஓசியில் பயணம் தான். இதுதான் திராவிட மாடலா? அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அறிவித்து பெண்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்திருக்கிறது இந்த அரசு எனப் பேசினார்.
ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களுக்கு இலவச பயணம் எனும் தி.மு.க அரசின் திட்டத்தை குருமூர்த்தி இழிவாகப் பேசியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி', துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு தனது தலையங்கத்தில் பெயர் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்திருந்தது.
பூர்வீகமே தட்சணையில்
முரசொலி தலையங்கத்தில், "தி.மு.க அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை மேன்மைப்படுத்தும் திட்டங்கள். இதுதான் சில வர்ணாசிரம சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாரும் வளர்கிறார்களே, எல்லாத் துறையும் வளர்கிறதே என்ற வயிற்றெரிச்சலில் உளறிக் கொண்டு இருக்கிறார்கள்.
'திராவிட மாடல் என்றால் ஓசி மாடல். அனைத்தையும் ஓசியாகக் கொடுப்பது' என்று 'தலையில் பிறந்த' பிறவி ஒன்று உளறி இருக்கிறது. பூர்வீகமே தட்சணையில் வாழக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதி, ஓசியைப் பற்றி பேசலாமா?
திராவிட மாடல்
'எல்லார்க்கும் எல்லாம்' என்பது திராவிட மாடல் ஆட்சி. 'அனைத்தும் எங்களுக்கு மட்டுமே' என்பது வர்ணாசிரம ஆட்சி. படிப்பைத் தடுக்கும். கட்டை விரலைக் காவு கேட்கும். அனைவரையும் கோவிலுக்கு வெளியில் நிறுத்தும். நந்தனை எரிக்கும். மறைந்திருந்து கொல்லும். சாலைகளை மறிக்கும். நேருக்கு நேர் பார்ப்பதையே பாவம் எனும்.
இவை அனைத்துக்கும் எதிரானது திராவிடவியல். அத்தகைய ஆட்சியைத்தான் முதலமைச்சர் முன்னெடுத்து வருகிறார். அதனால்தான் அவர்களுக்கு எரிகிறது." என முரசொலி தலையங்கத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
பிராமணர் சங்கம்
முரசொலியின் இந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் எதிர்வினை ஆற்றியுள்ளது. தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன், உழைத்து ஊதியம் - தட்சணை பெறும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.கவின் அதிகார வெறியை காட்டுகிறது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
இதுதொடர்பாக தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம், 'துக்ளக்' இதழ் ஆண்டு விழா நடந்தது. அதில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், 'முதல்வரின் ஓசி பஸ் பயணம் தான் திராவிட மாடலா?' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு, இம்மாதம் 17ஆம் தேதி முரசொலி நாளிதழில், 'தட்சணையில் வாழக்கூடிய கூட்டத்தின் பிரதிநிதியான குருமூர்த்தி, ஓசியை பற்றி பேசலாமா?' என்று, அவர் சார்ந்துள்ள பிராமண சமுதாயத்தை இழிவாக பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
உழைப்பால் உயர்ந்தவர்கள்
பிராமணர்கள் உழைப்பால், நேர்மையால், கடவுள் பக்தியால், தேச பக்தியால் உயர்ந்தவர்கள். தி.மு.க தலைவர்கள், கடவுள் மறுப்பை பற்றி பேசுவார்கள். அவர்களது குடும்பத்தினர் பரிகார பூஜை, அபிஷேகம் என்று கோவில் கோவிலாக செல்வார்கள். எதற்கெடுத்தாலும் பிராமண சமூகத்தை இழிவு செய்வது இவர்களது வாடிக்கை. இவர்கள் நடத்தும் கம்பெனிகளுக்கு பிராமணர் ஆடிட்டர். குடும்ப வைத்தியராக பிராமண டாக்டர்கள். கோர்ட்டில் வாதாட பிராமண வக்கீல் அமர்த்திக் கொள்வது இவர்கள் வழக்கம்.
சபை நாகரீகம் கருதி
சபை நாகரீகம் கருதி, பல கசப்பான உண்மைகளை நாங்கள் கூற விரும்பவில்லை. முரசொலி பத்திரிகை தன் இழிவான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலிக்கு பிராமணர் சங்கம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பது பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.