சென்னை தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! அப்போ அங்க என்ன வருதாம்?
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையின் பழமையான பேருந்து நிலையம் பிராட்வே பேருந்து நிலையம். இதை பூக்கடை பேருந்து நிலையம் என்றும் அழைப்பதுண்டு. வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் பிராட்வே பேருந்து நிலையம் தண்ணீரில் தத்தளித்தது. இதனால் அப்போதைய தமிழக அரசு, கோயம்பேட்டில் பிரம்மாண்டமாக கட்டி பேருந்து நிலையத்தை மாற்றியது. இதைத் தொடர்ந்து இங்கு மாநகருக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிராட்வே பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் இதை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இங்கு வணிக வளாகங்களும் கட்டப்படவுள்ளது.
இதற்காக ரூ 823 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த மாதம் முதல் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை தீவுத்திடலில் அமைப்பதற்காக ரூ 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த சில மாதங்களில் நடைபெறுகிறது.
பிராட்வேயில் மல்டி மாடல் இன்டகிரேஷன் என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. பிராட்வேயில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்படுகிறது. குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என்று அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. அது போல் அண்ணாநகர் (மேற்கு), கலைஞர் கருணாநிதி (கே.கே.) நகர் மற்றும் மந்தவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனை அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் விரைவில் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்படவுள்ளன.
பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட நிலையில் அங்கிருந்து இடப்பற்றாக்குறை காரணமாக கிளாம்பாக்கத்திற்கு கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி மாறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications