தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலையா.. ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிக்கிறது.. எடப்பாடி
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? என்றும் விமர்சித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) இன்று இரவு 7 மணியளவில் அவரது வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலினர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

அரிவாளால் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- குஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. @BSPArmstrong அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு.. 5 தனிப்படை அமைத்தது போலீஸ்.. கொலையாளிகளை பிடிக்க தீவிரம்
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி. @Mayawati அவர்களுக்கும், @bspindia தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
சுயேட்சை எம்.சி.. தலித் மக்களுக்கான போராளி.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? அதிர வைத்த படுகொலை!
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications