யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? சுயேட்சை மாமன்ற உறுப்பினர்.. தலித் மக்களுக்கான போராளி.. அதிர வைத்த படுகொலை!
சென்னை: 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். தலித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
சென்னையை பூர்வீகமாக கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை, தீவிர பெரியாரிய மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்தார். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் ஆம்ஸ்ட்ராங்.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்க், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங் சென்னை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக, போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி, சரியான ஊதியம், பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுமார் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
2007 ஆம் ஆண்டில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.
டூ-வீலர்களில் வந்த 6 பேர் கும்பல்.. வீட்டுக்கு முன்பாகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை! அலறிய பெரம்பூர்!
ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். நீட் தேர்வு ரத்து கோரியும், சிறுபான்மையினர் பாதுகாப்புக்காகவும், தலித் மக்களின் நலன் காக்கவும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தலித் அமைப்புகளுடன் இணக்கமாக அரசியல் பணியாற்றி வந்தார். 17 ஆண்டுகளாக தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று இரவு தனது வீட்டின் முன்பாகவே, மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங். தலைநகர் சென்னையிலேயே ஒரு கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் ஆம்ஸ்ட்ராங்கை ஆறு பேர் பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டது. அங்கு வந்த போலீசார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். தப்பியோடிய ஆறு பேரைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
சில ரவுடி கும்பல்கள் உடன் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? அரசியல் கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications