தமிழகத்திலிருந்து புதுவைக்கு இன்று முதல் பேருந்து சேவை.. என்னென்ன தளர்வுகள் முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்படுகின்றன. மாநிலங்களுக்கிடையிலான பேருந்து சேவையில் தடை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்றின் அடிப்படையில் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வாரம் ஊரடங்கு தளர்வின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு கொண்டு வந்தது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது. இது ஜூலை 19 ஆம் தேதி வரை நீடிக்கும். இன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தனை நாட்கள் வரை இரவு 8 மணி வரை இருந்த கடை திறப்பு தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேக்கரிகள்
அது போல் ஹோட்டல்கள்,பேக்கரிகள், தேனீர் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும் மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை நீடிக்கிறது.

கல்லூரிகள்
அது போல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை. தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று காலை 5.30 முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
புதுவையில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அது போல் தமிழகத்திலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த ஊரடங்கு தளர்வுகளில் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications