சென்னையில் குடிபோதையில் காரை ஏற்றிய தொழில் அதிபர்.. கொலைக்கு சமமான வழக்கு பாய்ந்தது
சென்னை: சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற முதியவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 14-ந் தேதி சவாரி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வடபழனி - நெற்குன்றம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. பின்னர் காரை ஓட்டி வந்த தொழில் அதிபர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்த போலீசார், கொலைக்கு சமமான வழக்கைபதிவு செய்துள்ளனர்.

ஏன் கொலைக்கு சமமான பிரிவில் வழக்கு
குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 'கொலைக்குச் சமமான மரணம்' என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். இதற்கான சட்ட ரீதியான காரணங்களை பார்ப்போம். முன்பு இத்தகைய விபத்துகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304A (அலட்சியத்தால் ஏற்படும் மரணம்) கீழ் பதியப்பட்டன. இதற்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை இருந்தது.
ஆனால் தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவரின் மரணத்திற்குத் தெரிந்தே காரணமாகும் போது, அது பிரிவு 105 (BNS) (பழைய IPC 304 பகுதி II) - "கொலைக்குச் சமமான மரணம்" என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
ஏன் இது கொலைக்கு சமமானது?
சட்டம் இதை இரண்டு முக்கிய காரணங்களுக்காகக் கடுமையாகப் பார்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படலாம், அதன் மூலம் ஒருவரின் உயிர் போகலாம் என்பது அந்த நபருக்குத் தெரியும். ஒருவரைக் கொல்ல வேண்டும் என்ற நேரடித் திட்டம் (Intent) இல்லாவிட்டாலும், "விபத்து நடக்க வாய்ப்புள்ளது" என்று தெரிந்தே அந்தச் செயலில் (குடிபோதையில் ஓட்டுவது) ஈடுபட்டதால் இது அலட்சியம் அல்ல, குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தக் கடுமையான பிரிவின் கீழ் (BNS Section 105) வழக்கு பதியப்பட்டால். குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இது பிணையில் வெளிவர முடியாத பிரிவாகும்.
தற்போதைய நடைமுறை
இந்த அடிப்படையில் தான் சென்னையில் தொழிலதிபர் நிசாந்த் மீதும் இத்தகைய கடுமையான பிரிவுதான் பாயும். ஏனெனில் அவர் மது அருந்திவிட்டு, அதிவேகமாகச் சென்று ஒருவரின் உயிரைப் பறித்துள்ளதாக குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. சமீபகாலமாக சென்னை போன்ற மாநகரங்களில், குடிபோதை விபத்துகளைக் குறைக்க காவல்துறை இத்தகைய 'கொலைக்குச் சமமான மரணம்' பிரிவையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஆட்டோ டிரைவர்
சென்னையில் நடந்த சம்பவத்தை விரிவாக பார்ப்போம். சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த 60 வயதாகும் பாஸ்கர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் கடந்த 14-ந் தேதி சவாரி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வடபழனி - நெற்குன்றம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவின் கண்ணாடி உடைந்து பாஸ்கரின் கழுத்தில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
தொழில் அதிபர்
இதைக் கண்டதும் காரை ஓட்டி வந்தவர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து அறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கார் உரிமையாளரை தேடி வந்தனர். பின்னர், காரின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபரான 27 வயதாகும் நிசாந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலைக்கு சமமான வழக்குப்பதிவு
விசாரணையில் குடிபோதையில் நண்பர்களுடன் காரில் அதிவேகமாக வந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதும், அதில் ஆட்டோ டிரைவர் பாஸ்கர் இறந்து போனதும் உறுதியானது. குடிபோதையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய நிசாந்த் மீது கொலைக்கு ஈடான மரணத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிசாந்தை கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications