Vijay to arrest? : கண்ணீரில் கரூர்! விஜய் கைதா? தலைமறைவான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுதாக்கல்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வரும் புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) விசாரணைக்கு வருகிறது.

கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என 41 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோரில் லேசான காயமடைந்தவர்கள் மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததற்கு காரணம் விஜய் தாமதமாக பிரச்சாரத்திற்கு வந்ததுதான் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் விஜய் நீண்ட நேரமாக அந்த கூட்டத்தை காக்க வைத்ததால் அவர்கள் தண்ணீர், உணவின்றி நீர் சத்து குறைந்து மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் விஜய், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்காமல், நேராக சென்னைக்கு கிளம்பி வந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என போஸ்டர்கள் அதகளப்படுகின்றன.
இந்த நிலையில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாமக்கல், கரூர் கூட்டங்களில் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்படும் என எத்தனையோ முறை சொல்லியும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் கேட்கவில்லை என கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முயன்ற நிலையில் அவர்களது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை போலீஸார் நேற்று இரவு கைது செய்து அவர்களிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ளதாக சொல்லப்படும் ஆனந்த்தையும் நிர்மல்குமாரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் முன்ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி இவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் தவெக கூட்டத்திற்குள் நுழைந்து ஆயுதங்களால் தாக்கினர்.
கூட்டம் அதிகரித்ததும் சில குண்டர்கள் விஜய் மீது காலணிகளை வீசினர். நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் காவல் துறையால் அனுமதிக்கப்பட்டது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் இந்த மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications