தொகுதி மக்கள் பாவம்தான்.. 20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தலுடன்தான் இடைத் தேர்தல்?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியான, திருவாரூர் உட்பட 20 தொகுதிகளுக்கும் அடுத்த வருடம் மே மாதம்தான் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
சென்னையில், சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் கூறியதாவது:
18 எம்எல்ஏக்களை, தகுதி நீக்கிய சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தற்போது ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகள் காலியாகின்றன.

இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும், அது, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அளிக்கப்படும். அதை தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, அனுப்பி வைப்பார். அதன் பிறகு அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான தேதியை தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்.
அடுத்த ஆண்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த 20 தொகுதிகளுக்கும், லோக்சபா தேர்தலுடன் இடைத் தேர்தலை இணைந்து நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் தெரிவித்துள்ளார். டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை எனில் உடனடியாக இடைத்தேர்தல் பணிகள் துவங்கப்படும் என்றும், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால், 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிித்துள்ளார்.
ஆனால், மேல்முறையீடு செய்ய தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications