செந்தில் பாலாஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா?காவேரியில் அனுமதிக்கப்படுவாரா
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 17 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் அவரை கைது செய்வதாக முதலில் அவருடைய தம்பி அசோக்குமாரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இந்த நிலையில் அவரை உடனடியாக சென்னை அரசு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சுயநினைவில்லாமல் இருந்ததாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
மேலும் நான்கைந்து முறை அவரை தட்டி எழுப்பியும் அவர் குரல் கொடுக்கவில்லை என்றும் அவருடைய காது அருகே வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றும் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று காலை 10.40 மணிக்கு ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் அவருக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி தேவைப்படுகிறது என ஓமந்தூரார் அரசு மருத்துவனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் இது முக்கிய ஆபரேஷன் என்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, அவருக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையேற்ற அரசு மருத்துவர்கள் காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நேரடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை விசாரணை செய்தார். இதையடுத்து அவருக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை எதிர்த்தும் அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரியும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை வழக்கறிஞர்களும் செந்தில் பாலாஜி வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதத்தை முன் வைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை மேற்கொள்வாரா இல்லை ஓமந்தூரார் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்படுமா என்பது குறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications