ஜெ. மரண விசாரணை.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
2016ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

கடுமையான விசாரணை
இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது கபருல்லா கான், அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக கடுமையான புகார்களை அடுக்கினார். அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறையில் நிறைய தவறுகள் இருந்தது, அதுதான் மரணத்திற்கு காரணம் என்று கூறினார்.

மறுப்பு தெரிவித்தது
இதற்கு அப்பல்லோ நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆறுமுகசாமி ஆணையத்தின் புகார்களில் உண்மை கிடையாது. அடிப்படை ஆதாரமற்ற புகார்கள் இது. உடனே ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடுத்தது.

என்ன கூறி இருந்தது
அப்பல்லோ மருத்துவமனை தனது மனுவில், ஆணையத்தின் விசாரணையில் நிறைய தவறு இருக்கிறது. மருத்துவ பெயர்கள் விவரங்கள் இதில் தவறாக உள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்றுதான் இந்த விசாரணையை செய்ய வேண்டும். எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தமிழக அரசு மருத்துவர்கள் இல்லாத குழுவை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

உத்தரவு
தற்போது இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜெ. மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது. அதற்கான அவசியம் இல்லை, விசாரணை தவறாக நடப்பதாக தெரியவில்லை. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது. அப்பல்லோ மனுவிற்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு அளிக்க வேண்டும், என்று சென்னை ஹைகோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications