இரட்டை யானைக்கு வேட்டு; விஜய் கொடியில் உச்சகட்ட குழப்பங்கள்? தேர்தல் ஆணையம் என்ன செய்யும்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கிடைக்குமா? அல்லது மாற்ற வேண்டிய நிலை ஏற்படுமா? என்பது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
பலரும் ஊகித்ததைப் போலவே கடந்த 22 ஆம் தேதி விஜய் தனது கட்சிக் கொடியையும் கொள்கை விளக்கப் பாடலையும் வெளியிட்டுப் பேசினார். அந்தக் கொடி வெளியான உடனேயே அதில் இரண்டு யானைகள் பதிக்கப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கொள்கை விளக்கப் பாடலில் அண்ணா, எம்ஜிஆர் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இன்னொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தலைவர்கள் மூன்று எழுத்துகள் உள்ளவர்கள் என்பதால் விஜய் கட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பாடல் வரிகள் விளக்கம் அளித்துள்ளன. வெறும் மூன்று எழுத்துகள் மட்டுமே ஒத்துப் போவதால் விஜய் இந்தத் தலைவர்களை உரிமைக் கொண்டாட முடியுமா? என்பது பலரும் முன்வைக்கும் கேள்வியாக உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளதைக் குறிப்பிடும் வகையில் விஜய் தனது கட்சிக் கொடியில் 28 நட்சத்திரங்களைப் பச்சை வண்ணத்தில் சேர்த்துள்ளார். மேலும் அதில் உள்ள 5 நட்சத்திரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் உள்ளன. அவை தென் மாநிலங்களை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளன. இதில் கேள்வி என்னவென்றால் ஆந்திராவைப் பிரித்து தெலங்கானாவை உருவாக்கியதைப் போல வருங்காலத்தில் புதியதாக ஒரு மாநிலம் இந்தியாவில் உருவாக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
பீகாரிலிருந்து பிரித்து அப்படித்தான் ஜார்கண்ட் வந்தது. அப்படியான காலங்களில் இந்த 28 என்பது 29 ஆகலாம். அப்போது இந்த நட்சத்திரங்கள் சொல்லப் போகும் செய்தியில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா? அல்லது விஜய் கட்சி ஆரம்பித்த போது இந்தியாவில் 28 மாநிலங்கள் தான் இருந்தன என விட்டுவிடப் போகிறார்களா? என்பது ஒரு கேள்வியாகத் தொக்கி நிற்கிறது. பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆனந்தன், அசாம் மற்றும் சிக்கிம் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள கட்சிகள் மட்டுமே யானையைப் பயன்படுத்த முடியும். பிற மாநிலக் கட்சிகள் பயன்படுத்த முடியாது. அது தேர்தல் ஆணைய விதிப்படி தவறு என்கிறார். கூடவே விலங்குகளைக் கட்சிக் கொடியில் பயன்படுத்துவதே தவறானது என்றும் சிலர் சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி வாதிட்டு வருகிறார்கள்.
இச்சர்ச்சை பற்றி பேசிய தவெக செய்தி தொடர்பாளர் லயோலா மணி, "எங்கள் கட்சியின் சின்னம் யானை இல்லை. அது கொடியில் உள்ள ஒரு குறியீடுதான். அதை நாங்கள் தேர்தல் சின்னமாகப் பயன்படுத்தினால்தான் தவறு. அம்பேத்கர் யானையை ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாகப் பயன்படுத்தி இருந்தார். அதை வைத்தே ஒரு குறியீடாக நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். யானையைப் பழங்குடி மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். நாங்கள் யானையை தேர்வு செய்ய அதுவும் ஒரு காரணம்" என்கிறார்.
கட்சியின் கொள்கை விளக்கப் பாடல் வரிகளில் சிருசு பெருசு என தமிழைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். சரியாகச் சொன்னால் சிறியது என்பதுதான் தமிழ். அப்படிப் பார்த்தால் 'றி' போட வேண்டும். அல்லது 'று' போட்டிருக்க வேண்டும். அந்தப் பிழைகள் வரும் காலத்தில் களையப்படும் என்கிறார் லயோலா மணி. மேலும் அந்தப் பாடலில் உள்ள தவறே தனக்குத் தெரியாது. இனிமேல் தான் பார்க்கவேண்டும் என்றும் அவர் சொன்னது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொள்கை விளக்கப் பாடல் வெளியாவதற்கு முன்பே ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் பார்க்கவில்லை என்று சொன்னால் கட்சியின் தகவல் தொடர்பு எந்தளவில் உள்ளது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
யானை சின்னம் தொடர்பான சிக்கலில் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றி முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமியிடம் ஒரு விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இதை சக கட்சியினர் எப்படி அணுகுகின்றனர் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும். ஒருவேளை தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தில் சிவில் வழக்காகத்தான் இதைப் பதிவு செய்து உரிமை கோர வேண்டிய நிலை உருவாகும். உரிமையியல் வழக்காக மனுத் தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் ஆணையம் நேரடியாகத் தலையிட முடியாது என அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் கொடி என்பது எளிமையாக இருக்கவேண்டும். அதை தொண்டர்கள் சுவரில் வரையும் போது குழப்பம் விளைவிக்கும் அளவில் இருக்கக் கூடாது. விஜய் தனது கட்சிக் கொடியில் ஒரு குறியீடு அல்ல; எக்கச்சக்க குறியீடுகளை, உருவங்களைப் பயன்படுத்தி இருக்கிறார். வெற்றியின் அடையாளமாக வாகை மலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை வாகை மலரா? தூங்குமூஞ்சி மலரா என்கிறார் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன்.
அந்த வாகை மலரை வரைவது கடினம். கூடவே 28 நட்சத்திரங்களை வரைய வேண்டும். அதில் ஐந்தை மட்டும் வெள்ளையில் இடவேண்டும். மற்றவை பச்சையில் வைக்க வேண்டும். அவை மட்டும் இல்லாமல் இரண்டு மிகப்பெரிய உருவங்களான யானையை வரைய வேண்டும். இவ்வளவு முத்திரைகளை ஒரு கொடிக்குள் வைப்பது கஷ்டமானது. அதை மக்கள் உடனடியாக புரிந்து கொள்ள மாட்டார்கள். கிராமப்புறங்களில் பார்த்ததும் அதை விஜய் கட்சியின் கொடி எனத் தனியாகத் தெரிவதைப் போல் இருக்க வேண்டும். தவெக கொடிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக் கொடிக்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே வண்ணத்தில் உள்ளது. அதனால் மக்கள் குழம்பலாம்.
கூடவே ஒரு விஜய் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சியினர் இந்த நிற கொடி தங்களின் கொடியை ஒத்து உள்ளது என்கிறார்கள். ஒருவேளை விஜய் கூட்டம் போடும் இடங்களில் அவர்களின் கொடியும் சேர்ந்து பறந்தால், குழப்பம் உச்சகட்டத்திற்கே சென்றுவிடும். இந்த அனுபவங்கள் இல்லாமல் விஜய் கொடியைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அதற்காக விளக்கத்தை மாநாட்டில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். அந்த விளக்கத்தை இப்போது செய்தி தொடர்பாளர்களே போட்டு உடைத்துவிட்டனர் என்பது விநோதம்.












Click it and Unblock the Notifications