வேலூர் தேர்தல் ரத்து.. திமுகவுக்கு சாட்டையடி.. அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்துள்ளதன் மூலம், திமுகவுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறியதாவது: ஜனநாயகத்தை மதிப்பது அதிமுக. திண்டுக்கல்லில் தொடங்கி திருமங்கலம் வரை பல்வேறு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது திமுகவின் வழக்கமாக இருந்து வருகிறது.
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது யாரால் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. இது திமுகவுக்கு ஒரு நல்ல பாடம். யார் இந்த பணத்தை கொடுக்கிறார்களோ அவர்கள் போட்டியிடுவதை தடுப்பது என்பது நல்ல விஷயமாக இருக்கும்.
பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தடை விதிக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்.

ஜனநாயகத்தை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று திமுக நினைப்பது ஆரோக்கியமான போக்கு கிடையாது. விஷச் செடியை வேரோடு அழிப்பது போன்ற விஷயம் இது. சென்னையில் இரவோடு இரவாக திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து அதை நடந்து கொண்டிருக்கின்றன.
திமுகவினர், அமமுக 1000 கோடி, 2000 கோடி அடித்துள்ளனர். ஆனால் மக்களுக்கு கொடுப்பது 100 ரூபாய், 200 ரூபாய் மட்டுமே. இவ்வாறு மக்களை ஆசை காட்டி ஏமாற்றி வருகிறார்கள். அந்த வகையில் இது அவர்களுக்கு சரியான சவுக்கடி. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications