என் தாத்தா என்னை வைத்து TVS 50 ஓட்டுனாரு.. நான் அவரை வைத்து ஃப்ளைட் ஓட்டுறேன்.. நெகிழ்ந்த கேப்டன்!
சென்னை: தனது தாத்தா பயணிக்கும் விமானத்தை தானே இயக்கியதை பெருமையாக கூறியுள்ளார் இளம் விமானியான பிரதீப் கிருஷ்ணன். சர்ப்ரைஸாக இந்த தகவலை பேரன் வெளியிட்டதும், தாத்தா முகத்தில் பெருமையைப் பார்க்கணுமே..!
இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார் பிரதீப் கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தான் விமானங்களை இயக்கும்போது, தமிழ் மொழியில் அவ்வப்போது பயணிகளுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சென்னை - கோவை சென்ற பயணிகளுக்கு அண்மையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் விமானி பிரதீப் கிருஷ்ணன்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் இண்டிகோ விமானம் புறப்படும் முன் பயணிகளிடம் பேசிய கேப்டன் பிரதீப் கிருஷ்ணன், ஒரு சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்டார். இதைக் கேட்டு, அவரது குடும்பத்தினர், பயணிகள் என அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
பைலட் பிரதீப் கிருஷ்ணன் பேசும்போது, "என்னுடன் எனது குடும்பத்தினர் பயணம் செய்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் தாத்தா, பாட்டி, அம்மா ஆகியோர் இந்த விமானத்தில் 29வது வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இன்று நான்தான் இந்த விமானத்தின் கேப்டன் என்பது அவர்களுக்கு தெரியாது.
என் தாத்தா இன்று தான் என்னுடன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்கிறார். பலமுறை அவரது டிவிஎஸ் 50 வண்டியில் அவருடன் உட்கார்ந்து நான் சென்றுளேன். இன்று அவருக்கு நான் விமானம் ஓட்டப் போகிறேன்.
தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு விமானியின் கனவு. அந்த வகையில் இன்று எனக்கு நெகிழ்ச்சியான தருணம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பிரதீப் கிருஷ்ணன்.
கேப்டன் பிரதீப் கிருஷ்ணன் பேசும்போது அவரது தாய் நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார். பிரதீப் கிருஷ்ணனின் தாத்தா, பெருமையுடன் எழுந்து அனைவருக்கும் வணக்கம் சொன்னார். இந்த நெகிழ்ச்சிப்பூர்வமான தருணத்திற்கு சாட்சியாக இருந்த பயணிகள் மகிழ்ச்சியில் கைதட்டி உற்சாகம் செய்தனர்.












Click it and Unblock the Notifications