ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரில் ஒரே மிதி! தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார்! சென்னையில் ஷாக் சம்பவம்!
சென்னை: சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ மற்றும் சாலையோரம் இருந்த கடைகள் மீது மோதிய விபத்தில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். காரின் ஓட்டுநர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில், சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றாக வேளச்சேரி 100 அடி சாலையும் மிக முக்கியமானதாக உள்ளது. கிண்டியிலிருந்து வேளச்சேரி பீனிக்ஸ் மால் வரை செல்லும் இந்த சாலையில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பிரபல மால்கள் உள்ளன.

இதனால் எப்போதும் அந்த சாலை பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் தான் இன்று அந்த சாலையில் விபத்து ஒன்று நேரிட்டுள்ளது. இந்த சாலையில் சென்னை கிண்டியில் இருந்து வேளச்சேரி நோக்கி மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் முன்னே சென்ற இரு சக்கர வாகனம் திடீரென நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த காரின் ஓட்டுனர், அப்பொழுது முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டுள்ளார்.
ஆனால், அவசரத்தில் காரின் ப்ரேக் லிவரை அழுத்துவதற்கு பதிலாக ஓட்டுனர் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று அந்த சாலையில் விபத்து ஒன்று நேரிட்டிருக்கிறது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மாருதி ஸ்விப்ட் கார் அதிவேகமாக தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் வேகமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் ஆட்டோவும் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த இளநீர் கடை மற்றும் பாதசாரிகள் இருவர் மீது பயங்கரமாக மோதியது. திடீரென நடந்த விபத்தால் அந்த இடமே போர்க் களம் போல காட்சி அளித்தது. மோதிய வேகத்தில் காரும் ஆட்டோவும் சேதம் அடைந்ததோடு இளநீர் கடையில் நின்றிருந்த கடைக் காரர் மற்றும் பாதசாரிகள் இருவர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் ஆட்டோவில் ஓட்டுனர், இளநீர் கடைக்காரர் மற்றும் சாலையில் நடந்து சென்ற இருவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தனர். இதை அடுத்து அருகில் இருந்தோர் உடனடியாக தமிழ்நாடு அரசின் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காரை வேகமாகவும் கவனக் குறைவாகவும் இயக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், கிண்டி போக்குவரத்து புலனாய்வு துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தின் போது அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications