ஊரடங்கு விதிகளை மீறி எம்எல்ஏக்கள் கூட்டம்... ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வென்று, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் இழுபறி நிலவியது

இந்நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்ய நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதாகப் புகார் எழுந்தன.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications