சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
சென்னை: ஆழ்வார்பேட்டையில் தனியார் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள பிரபல பப் ஒன்றில் நேற்று மாலை எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. நேற்று மாலை 7 மணியளவில் பப்பின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். உள்ளே சுமார் 20- 22 பேர் இருந்ததாகவும் அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 பேர் உயிரிழப்பு: உயிரிழந்தோர் தமிழகத்தைச் சேர்ந்த 45 வயதான சைக்ளோன்ராஜ், மணிப்பூரைச் சேர்ந்த இவுரவ் மேக்ஸ் (24). லாலி (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பேரும் அங்கே ஊழியர்களாக பணியாற்றியவர்களாம். மாலை நேரத்தில் முதல் தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததே விபத்திற்குக் கரணம். மேற்கூரை மொத்தமாக இடிந்து விழுந்து இருந்தால் சேதம் மிக மோசமாக இருந்து இருக்கும்.
விபத்து நடந்த பப்பிற்கு மிக அருகே தான் சுரங்க மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதனால் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று முதலில் தகவல் பரவியது. இதையடுத்து சென்னை மெட்ரோ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை நடத்தினர். அதன் பின்னர் விபத்திற்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை என்று விளக்கமளித்தனர்.
மெட்ரோ விளக்கம்: விபத்து நடந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் தான் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாகத் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம். கட்டிடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டது இல்லை என்றும் கூறியிருந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அபிராமிபுரம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
வழக்குப்பதிவு: இதற்கிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் அபிராமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேளிக்கை விடுதி மேலாளர் சதீஷ் உட்பட 12 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக சதீஷ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications