தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5% இட ஒதுக்கீடு கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழ் வழியில் பள்ளிபடிப்பை படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் ஹரூர் பெரியார் நகரை சேர்ந்த என்.முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும், 5 ஆயிரத்து 400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாவும் இது தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ் வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையயும், நலனையும் பாதுகாக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 தேதிகளில் தமிழக முதல்வர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.












Click it and Unblock the Notifications