அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கால முறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், அக்டோபர் 25ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்கள், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், ஏழை மக்கள் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படக் கூடாது எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.