ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான் திமுகவின் கருத்து.. தனி தீர்மானம் கொண்டு வந்து ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்தார். அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் கருத்து என்று தனித்தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. பல்வேறு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பாமக எம்எல்ஏ ஜிகே மணி, 10.5 சதவீத வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், "இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு பிறகு தான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், ஜாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தனித்தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது:
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற உயர்ந்த கோட்பாட்டின்படி எல்லாருக்கும் எல்லாம் என்ற சமுதாய சிந்தனையை அடிப்படையாக கொண்டு சமூக நீதி பயணத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.
சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் கல்வி, வேலைவாய்ப்ப பெறுவதில் சமவாய்ப்பு மற்றும் சமவாய்ப்பு கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பரவலான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற முடியும். இதனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தான் திமுகவின் கருத்தாக உள்ளது'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications