ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து திடீர் உயர்வு! தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி!
சென்னை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு திடீரென நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அதே நேரம் தமிழக எல்லையை காவிரி நீர் வந்தடைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக கர்நாடகா காவிரி கரையோரங்களில் கனமழை பெய்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் மழை குறைந்தால் நீர் வரத்தும் குறையும்.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன் தினம் 5 ஆயிரம் கனஅடியாகவும் நேற்று 3 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
இந்த நிலையில் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு சுமார் 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்தனர். கர்நாடகாவில் தீவிரமாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணையான கபினி அணையில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 8000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
அந்த நீரானது தற்போது படிப்படியாக ஒகேனக்கல், பிலிகுண்டு பகுதிக்கு வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 6,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் எனது பார்க்கப்படுகிறது. நீர்வரத்து நிலவரங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பாசனத்திற்கு ஆங்காங்கே அணைகளும் திறக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications