பொள்ளாச்சி பலாத்காரம்.. பொதுமக்களிடம் தகவல் கேட்கிறது சிபிசிஐடி.. இமெயில் ஐடி அறிவிப்பு
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, திருநாவுக்கரசு உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். இதன்பிறகு பாலா என்ற ஒரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி போலீசுக்கும் பிறகு சிபிஐக்கும் மாற்றப்பட்டது. இருப்பினும் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரித்தபடி உள்ளனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரிடம் இதுகுறித்து தெரிவிக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களும்கூட புகார் அளிக்கலாம்.
தகவல் அளிக்க கூடிய பொதுமக்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது. [email protected] என்ற இமெயில் முகவரிக்கோ, 800 அவினாசி சாலை, கோவை என்ற முகவரியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, பொதுமக்கள் விவரங்கள் தெரிவிக்கலாம்.