கிரானைட் முறைகேடு! மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு? மதுரை சிபிஐ கோர்ட் கேள்வி
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ. 259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது 2012 ஆம் ஆண்டு கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்ட நபர்கள் மீது 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
துரை தயாநிதிக்கு சொந்தமான இடங்களான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ 40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக அமலாக்கத் துறை முடக்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, இந்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி சார்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியான பிரச்சினை இருப்பதால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அமலாக்கத் துறை வழக்கறிஞர், துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்து முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்.
வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் காயத்துடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துரை தயாநிதி சுமார் 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் வீடு திரும்பினார். தற்போது அமெரிக்காவில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications