கரூர் நெரிசல் மரணம்.. 8 நாள் பரபர விசாரணை! நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ! அடுத்து என்ன?
சென்னை: நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த எட்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அது தொடர்பான முன் அறிக்கை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட துயரச்சம்பவம் அனைவரையும் உலுக்கியது. வேலுசாமிபுரத்தில் நடந்த அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து முதலில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அக்டோபர் 5ஆம் தேதி கரூருக்கு வந்து, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தது.

கரூர் கூட்ட நெரிசல்
மின்வாரியம், மருத்துவம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இருவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தும் இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் குழு கரூருக்கு வந்து விசாரணையைத் தொடங்கியது.
சிபிஐ விசாரணை
அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி, வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சாட்சிய விவரங்களையும் பெற்றனர். பின்னர், வேலுசாமிபுரம் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். அங்கு கூட்டத்தின் போது சில தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியதில் கிளை முறிந்து விழுந்தது, இதுவே ஆரம்ப நெரிசலுக்குக் காரணமானதாகக் கூறப்படுகிறது. இதைச் சுற்றி வனத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ குழு விசாரணை மேற்கொண்டது.
41 உயிரிழப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில நாட்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றிருந்த சிபிஐ அதிகாரிகள், தற்போது மீண்டும் கரூருக்கு திரும்பி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு குழு
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை மேற்பார்வை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எல்லை பாதுகாப்புப் படை ஐஜி சுமித் சரண் மற்றும் தில்லி ரிசர்வ் போலீஸ் படை ஐஜி சோனல் மிஸ்ரா ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அல்லது நாளை கரூருக்கு வந்து சிபிஐ விசாரணை நடவடிக்கைகளை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இடைக்கால அறிக்கை
இதற்கிடையில், எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் எட்டு நாட்கள் நீடித்த விசாரணைக்கு பிறகு, தங்களது இடைக்கால அறிக்கையை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நீதிபதி பரத் குமார் முன் தாக்கல் செய்துள்ளனர். இதனுடன், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை புதிய கட்டத்தை எட்டியுள்ளதோடு, விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. அதே நேரத்தி அறிக்கை தொடர்பான விவரங்களை சிபிஐ அதிகாரிகள் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications