நாளை மறுநாள் பொதுத்தேர்வு.. 10, +2 பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா? சிபிஎஸ்இ மறுப்பு
சென்னை: நாளை மறுநாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதாக பரவும் தகவலை சிபிஎஸ்இ முற்றிலுமாக மறுத்துள்ளது. அதோடு மாணவர்கள், பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
நாடு முவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு வரும் 15ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவ தொடங்கியது. இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. மேலும் சிபிஎஸ்இ நிர்வாகம் இதுபற்றி விசாரணையை தொடங்கியது.
இந்த விசாரணையின்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சிலர் தவறான தகவல்களை வலைதளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் தான் சிபிஎஸ்இ சார்பில் எக்ஸ் வலைதளத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‛‛சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் தவறான செய்தி பரப்பப்படுகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். ஏனென்றால் எந்த வினாத்தாளும் கசியவில்லை. மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் அறிவித்தபடி வரும் 15ம் தேதியில் இருந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறும். பொதுத்தேர்வு குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கவால்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் நபர் பற்றி தெரிந்தால் எங்களுக்கு தகவல் அளிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications