சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள்.. நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ஏன் முக்கியம்?
சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷனவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக டிராபிக் இருக்கும் நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. சாலைகளில் டிராபிக் நெரிசலைக் குறைக்க பொது போக்குவரத்தை வலுப்படுத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மெட்ரோ 2ம் கட்டம்: குறிப்பாக மெட்ரோ ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்னையில் இப்போது 2 ரூட்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை என இரு ரூட்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இதையடுத்து மாதவரம் காலனி- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம் காலனி- சோழிங்கநல்லூர் என 3 ரூட்களில் 116 கிமீ தூரத்திற்கு இப்போது சென்னை மெட்ரோ 2ம் கட்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இந்த சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வந்தது.
நிதி ஒதுக்க கோரிக்கை: அதாவது சென்னை மெட்ரோ முதல் கட்டத்தில் 50% நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு அரசு மீதமுள்ள 50% தொகையை ஒதுக்கியது. ஆனால், மெட்ரோ 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்குச் சென்னை மெட்ரோ 2ம் கட்டம் என்பது தமிழ்நாடு அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்றே பதிலாக வந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு நிதி விடுவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசின் நிதியிலேயே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேநேரம் மறுபுறம் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யத் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இது தொடர்பாகச் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
நிதி ஒதுக்கீடு: இந்தச் சூழலில் தான் சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2ம் கட்டத்திற்கு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷனவ் தெரிவித்துள்ளார். மெட்ரோ முதல் கட்டம் போலவே 2வது கட்ட திட்டமும் 50:50 என்ற முதலீட்டு அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் சென்னை நகரில் மெட்ரோ 2ம் கட்ட திட்டம் மூலம் வீடுகளில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ளது போலச் சென்னை மெட்ரோ இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் நன்றி: இதற்கிடையே சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்தற்காகப் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எனது கோரிக்கையை ஏற்றுச் சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழக மக்களின் பல நாள் கோரிக்கைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications