பார்வையற்றோரும் இனி திருக்குறள் படிக்கலாம்! 46 நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்! புதிய முயற்சி!
சென்னை: பார்வையற்றோரும் இனி திருக்குறள் படிக்கும் வகையில் 46 நூல்களை பிரெய்லி வடிவில் உருவாக்கியுள்ளது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்.
கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடைய உள்ளதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பிரெய்லி நூல்கள் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

செம்மொழி நிறுவனம்
''தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் மொழிபெயர்ப்புகள், ஆய்வு நூல்கள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் செவ்விலக்கிய நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டங்களை செம்மொழி நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.''

பிரெய்லி நூல்
''இதுதவிர, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டியல், தொல்லியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல், செவ்வியல் நூல்களின் சிறப்புகளை யூ-டியூப் மூலம் பரப்புதல் போன்ற திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன. இதைத் தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புதிட்டமும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.''

பார்வையற்றோர்
''அதன்படி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இதில் 41 நூல்கள் செவ்வியல் நூல்கள் ஆகும்.''

எளிய வடிவில் வடிவமைப்பு
''இவை அனைத்தும் எளிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும். பின்னர் நூல்கள் அச்சிடப்பட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.'' இவ்வாறு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications