புயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு
தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வந்துள்ளனர்.
சென்னை: புயல் வெள்ளச் சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். முதல்வர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிவர் புயலால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கின்றனர். டிசம்பர் 8ஆம் தேதி வரை புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கின்றனர்.
வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன.

அப்போது தமிழக முதல்வரை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உறுதி அளித்தார். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெருமளவு சேதமில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நிவர் புயல் மாமல்லபுரத்துக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சேதத்தை உருவாக்கியது.
இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குள் புரேவி புயல் உருவாகி இலங்கையில் கரையை கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பாம்பன் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அடுத்தடுத்து புயல்கள் உருவாகி அதிக மழை பெய்ததால் ஏராளமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வாழை, தென்னை மரங்கள் சரிந்தன. பல கால்நடைகள் இறந்ததோடு, வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
புயல் மழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்தனர். இதையொட்டி புயல் சேதங்களை கணக்கிட மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் அசு தோஷ் அக்னி கோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த குழுவினர் இன்று மதியம் சென்னை வந்துள்ளனர். மத்திய குழுவினர் சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். மதியம் 4 மணியளவில் தலைமை செயலகம் சென்று அதிகாரிகளை சந்திக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
தலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மத்திய குழுவினருக்கு வெள்ள சேத நிலவரங்களை விவரிக்கிறார்கள். அதிகாரிகள் சொல்லும் விவரங்களை மத்திய குழுவினர் விரிவாக கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் நாளை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்துள்ளனர்.
ஒரு குழுவினரை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் நாளை தென்சென்னை பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சென்று பல சேதங்களை பார்வையிடுகிறார்கள்.
மத்திய குழுவினர் 7ஆம் தேதி காலையில் புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். மதியம் 2 மணிக்கு பிறகு கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து சென்னை திரும்புகிறார்கள்.
இதே போல் மற்றொரு மத்திய குழுவினரை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் 6ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள்.
நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும் பார்க்கிறார்கள். அதன் பிறகு காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். 6ஆம்தேதி இரவு வேலூரில் தங்கும் மத்திய குழுவினர் 7ஆம்தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு 7ஆம் தேதி இரவு சென்னை வருகிறார்கள்.
2 மத்திய குழுவினரும் 8ஆம் தேதி காலையில் சென்னையில் தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தமிழகத்தின் சார்பில் புயல் பாதிப்பு சேத விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவாக பட்டியலிட்டு மத்திய குழுவிடம் அளிக்க உள்ளார்.
அதன்பிறகு மத்திய குழுவினர் 8ஆம் தேதி மாலை டெல்லி செல்கிறார்கள். தமிழக அரசு கொடுக்கும் அறிக்கை மற்றும் நேரில் பார்வையிட்ட சேத விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசுக்கு புயல் பாதிப்பு சேதங்களை மத்திய குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதியை வழங்கும்.












Click it and Unblock the Notifications